சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.032 திருக்கோடிக்குழகர்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அமுதகடநாதர், தேவியார் – மையார்தடங்கணம்மை


பண் – கொல்லி

320
கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற்
குடிதான் அயலேஇருந் தாற்குற்ற மாமோ
கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே. 7.32.1

321
முன்றான் கடல்நஞ்ச முண்ட அதனாலோ
பின்றான் பரவைக் குபகாரஞ் செய்தாயோ
குன்றாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா
என்றான் தனியே இருந்தாய் எம்பிரானே. 7.32.2

322
மத்தம் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால்
பத்தர் பலர்பாட இருந்த பரமா
கொத்தார் பொழில்சூழ் தருகோடிக் குழகா
எத்தாற் றனியே இருந்தாய் எம்பிரானே. 7.32.3

323
காடேல் மிகவா லிதுகா ரிகையஞ்சக்
கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகைகுழற
வேடித்தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர்
கோடிக் குழகா இடங்கோயில் கொண்டாயே. 7.32.4

324
மையார் தடங்கண்ணி பங்காகங் கையாளும்
மெய்யாகத் திருந்தனள் வேறிடம் இல்லை
கையார் வளைக்காடு காளோடும் உடனாய்க்
கொய்யார் பொழிற்கோடி யேகோயில் கொண்டாயே. 7.32.5

325
அரவேர் அல்குலாளை ஓர்பாக மமர்ந்து
மரவங் கமழ்மா மறைக்கா டதன்றென்பாற்
குரவப் பொழில்சூழ் தருகோடிக் குழகா
இரவே துணையாய் இருந்தாய் எம்பிரானே. 7.32.6

326
பறையுங் குழலும் ஒலிபாட லியம்ப
அறையுங் கழலார்க்க நின்றாடும் அமுதே
குறையாப் பொழில்சூழ் தருகோடிக் குழகா
இறைவா தனியே இருந்தாய் எம்பிரானே. 7.32.7

327
ஒற்றியூ ரென்றஊ னத்தினா லதுதானோ
அற்றப் படஆ ரூரதென் றகன்றாயோ
முற்றா மதிசூடிய கோடிக் குழகா
எற்றாற் றனியே இருந்தாய் எம்பிரானே. 7.32.8

328
நெடியானொடு நான்முக னும்மறி வொண்ணாப்
படியான் பலிகொள்ளும் இடங்குடி இல்லை
கொடியார்பலர் வேடர்கள் வாழுங் கரைமேல்
அடிகேள் அன்பதா யிடங்கோயில் கொண்டாயே. 7.32.9

329
பாரூர் மலிசூழ் மறைக்கா டதன்றென்பால்
ஏரார் பொழில்சூழ் தருகோடிக் குழகை
ஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார்
சீரார் சிவலோகத் திருப்பவர் தாமே. 7.32.10

திருச்சிற்றம்பலம்