சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.034 திருப்புகலூர்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அக்கினியீசுவரர் தேவியார் – கருந்தார்க்குழலியம்மை


பண் – கொல்லி

340
தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ் சார்வினுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை புகலூர்பாடுமின் புலவீர்காள்
இம்மையேதருஞ் சோறுங்கூறையும் ஏத்தலாமிடர் கெடலுமாம்
அம்மையேசிவ லோகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 7.34.1

341
மிடுக்கிலாதானை வீமனேவிறல் விசயனேவில்லுக் கிவனென்று
கொடுக்கிலாதானைப் பாரியேயென்று கூறினுங்கொடுப் பாரிலை
பொடிக்கொள்மேனியெம் புண்ணியன்புக லூரைப்பாடுமின் புலவீர்காள்
அடுக்குமேலம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 7.34.2

342
காணியேற்பெரி துடையனேகற்று நல்லனேசுற்றம் நற்கிளை
பேணியேவிருந் தோம்புமேயென்று பேசினுங்கொடுப் பாரிலை
பூணிபூண்டுழப் புட்சிலம்புந்தண் புகலூர்பாடுமின் புலவீர்காள்
ஆணியாயம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 7.34.3

343
நரைகள்போந்துமெய் தளர்ந்துமூத்துடல் நடுங்கிநிற்குமிக் கிழவனை
வரைகள்போல்திரள் தோளனேயென்று வாழ்த்தினுங்கொடுப் பாரிலை
புரைவெள்ளேறுடைப் புண்ணியன்புக லூரைப்பாடுமின் புலவீர்காள்
அரையனாயம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 7.34.4

344
வஞ்சநெஞ்சனை மாசழக்கனைப் பாவியைவழக் கில்லியைப்
பஞ்சதுட்டனைச் சாதுவேயென்று பாடினுங்கொடுப் பாரிலை
பொன்செய்செஞ்சடைப் புண்ணியன்புக லூரைப்பாடுமின் புலவீர்காள்
நெஞ்சில்நோயறுத் துஞ்சுபோவதற் கியாதுமையுற வில்லையே. 7.34.5

345
நலமிலாதானை நல்லனேயென்று நரைத்தமாந்தரை இளையனே
குலமிலாதானைக் குலவனேயென்று கூறினுங்கொடுப் பாரிலை
புலமெலாம்வெறி கமழும்பூம்புக லூரைப்பாடுமின் புலவீர்காள்
அலமராதமர் உலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 7.34.6

346
நோயனைத்தடந் தோளனேயென்று நொய்யமாந்தரை விழுமிய
தாயன்றோபுல வோர்க்கெலாமென்று சாற்றினுங்கொடுப் பாரிலை
போயுழன்றுகண் குழியாதேயெந்தை புகலூர்பாடுமின் புலவீர்காள்
ஆயமின்றிப்போய் அண்டமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 7.34.7

347
எள்விழுந்திடம் பார்க்குமாகிலும் ஈக்கும்ஈகிலன் ஆகிலும்
வள்ளலேயெங்கள் மைந்தனேயென்று வாழ்த்தினுங்கொடுப் பாரிலை
புள்ளெலாஞ்சென்று சேரும்பூம்புக லூரைப்பாடுமின் புலவீர்காள்
அள்ளற்பட்டழுந் தாதுபோவதற் கியாதுமையுற வில்லையே. 7.34.8

348
கற்றிலாதானைக் கற்றுநல்லனே காமதேவனை யொக்குமே
முற்றிலாதானை முற்றனேயென்று மொழியினுங்கொடுப் பாரிலை
பொத்திலாந்தைகள் பாட்டறாப்புக லூரைப்பாடுமின் புலவீர்காள்
அத்தனாயம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 7.34.9

349
தையலாருக்கோர் காமனேயென்றுஞ் சாலநல்வழக் குடையனே
கையுலாவிய வேலனேயென்று கழறினுங்கொடுப் பாரிலை
பொய்கையாவியின் மேதிபாய்புக லூரைப்பாடுமின் புலவீர்காள்
ஐயனாயம ருலகமாள்வதற் கியாதுமையுற வில்லையே. 7.34.10

350
செறுவினிற்செழுங் கமலமோங்குதென் புகலூர்மேவிய செல்வனை
நறவம்பூம்பொழில் நாவலூரன் வனப்பகையப்பன் சடையன்றன்
சிறுவன்வன்றொண்டன் ஊரன்பாடிய பாடல்பத்திவை வல்லவர்
அறவனாரடி சென்றுசேர்வதற் கியாதுமையுற வில்லையே. 7.34.11

திருச்சிற்றம்பலம்