சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.041 திருக்கச்சூர் ஆலக்கோயில்


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – தினம்விருந்திட்டநாதர், தேவியார் – கன்னியுமையம்மை


பண் – கொல்லிக்கௌவாணம்

415
முதுவாய் ஓரி கதற முதுகாட் டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமா றிதுவோ கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. 7.41.1

416
கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக் கழலுஞ்சிலம்புங் கலிக்கப் பலிக்கென்
றுச்சம் போதா ஊரூர் திரியக் கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே. 7.41.2

417
சாலக் கோயில் உளநின் கோயில் அவையென் றலைமேற் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன் வானோர் அறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில் குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ் அறங்கட் டுரைத்த அம்மானே. 7.41.3

418
விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய் மின்னேர் உருவத் தொளியானே
கடையும் புடைசூழ் மணிமண் டபமுங் கன்னி மாடங் கலந்தெங்கும்
புடையும் பொழிலும் புனலுந் தழுவிப் பூமேல் திருமா மகள்புல்கி
அடையுங் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. 7.41.4

419
மேலை விதியே வினையின் பயனே விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை யெழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. 7.415

420
பிறவாய் இறவாய் பேணாய் மூவாய் பெற்ற மேறிப் பேய்சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகா டென்றும் இடமாக் கொண்டு நடமாடி
ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் உருகாரே
அறவே ஒழியாய் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே. 7.41.6

421
பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவார் அவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மங்கை பங்கா கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. 7.41.7

422
ஊனைப் பெருக்கி உன்னை நினையா தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங் கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையும் மடமென் னோக்கி மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய் ஆலக் கோயில் அம்மானே. 7.41.8

423
காதல் செய்து களித்துப் பிதற்றிக் கடிமா மலரிட் டுனையேத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க ஐயங் கொள்வ தழகிதே
ஓதக் கண்டேன் உன்னை மறவேன் உமையாள் கணவா எனையாள்வாய்
ஆதற் பழனக் கழனிக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. 7.41.9

424
அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர் ஆலக் கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்தா ரூரன் ஆரூ ரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல்நா வலர்கோன்செஞ்சொல் நாவன் வன்றொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லார் அவரெந் தலைமேற் பயில்வாரே. 7.41.10

திருச்சிற்றம்பலம்