சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.051 திருவாரூர்


திருச்சிற்றம்பலம்


பண் – பழம்பஞ்சுரம்

518
பத்திமையும் அடிமையையுங் கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுவிதனைப் பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாட் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. 7.51.1

519
ஐவணமாம் பகழியுடை அடல்மதனன் பொடியாகச்
செவ்வணமாந் திருநயனம் விழிசெய்த சிவமூர்த்தி
மையணவு கண்டத்து வளர்சடையெம் மாரமுதை
எவ்வணம்நான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. 7.51.2

520
சங்கலக்குந் தடங்கடல்வாய் விடஞ்சுடவந் தமரர்தொழ
அங்கலக்கண் தீர்த்துவிடம் உண்டுகந்த அம்மானை
இங்கலக்கும் உடற்பிறந்த அறிவிலியேன் செறிவின்றி
எங்குலக்கப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. 7.51.3

521
இங்ஙனம்வந் திடர்ப்பிறவிப் பிறந்தயர்வேன் அயராமே
அங்ஙனம்வந் தெனையாண்ட அருமருந்தென் ஆரமுதை
வெங்கனல்மா மேனியனை மான்மருவுங் கையானை
எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. 7.51.4

522
செப்பரிய அயனொடுமால் சிந்தித்துந் தெரிவரிய
அப்பெரிய திருவினையே அறியாதே அருவினையேன்
ஒப்பரிய குணத்தானை இணையிலியை அணைவின்றி
எப்பரிசு பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. 7.51.5

523
வன்னாகம் நாண்வரைவில் அங்கிகணை அரிபகழி
தன்னாகம் உறவாங்கிப் புரமெரித்த தன்மையனை
முன்னாக நினையாத மூர்க்கனேன் ஆக்கைசுமந்
தென்னாகப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. 7.51.6

524
வன்சயமாய் அடியான்மேல் வருங்கூற்றின் உரங்கிழிய
முன்சயமார் பாதத்தால் முனிந்துகந்த மூர்த்திதனை
மின்செயும்வார் சடையானை விடையானை அடைவின்றி
என்செயநான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. 7.51.7

525
முன்னெறிவா னவர்கூடித் தொழுதேத்தும் முழுமுதலை
அந்நெறியை அமரர்தொழும் நாயகனை அடியார்கள்
செந்நெறியைத் தேவர்குலக் கொழுந்தைமறந் திங்ஙனம்நான்
என்னறிவான் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. 7.51.8

526
கற்றுளவான் கனியாய கண்ணுதலைக் கருத்தார
உற்றுளனாம் ஒருவனைமுன் இருவர்நினைந் தினிதேத்தப்
பெற்றுளனாம் பெருமையனைப் பெரிதடியேன் கையகன்றிட்
டெற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. 7.51.9

527
ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத்தந் தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. 7.51.10

528
வங்கமலி கடல்நஞ்சை வானவர்கள் தாமுய்ய
நுங்கிஅமு தவர்க்கருளி நொய்யேனைப் பொருட்படுத்துச்
சங்கிலியோ டெனைப்புணர்த்த தத்துவனைச் சழக்கனேன்
எங்குலக்கப் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே. 7.51.11

529
பேரூரும் மதகரியின் உரியானைப் பெரியவர்தஞ்
சீரூருந் திருவாரூர்ச் சிவனடியே திறம்விரும்பி
ஆரூரன் அடித்தொண்டன் அடியன்சொல் அகலிடத்தில்
ஊரூரன் இவைவல்லார் உலகவர்க்கு மேலாரே. 7.51.12

திருச்சிற்றம்பலம்