சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.052 திருவாலங்காடு


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஊர்த்துவதாண்டவேசுவரர், தேவியார் – வண்டார்குழலியம்மை.


பண் – பழம்பஞ்சுரம்

530
முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையா ளுமைபங்கா
சித்தா சித்தித் திறங்காட்டுஞ் சிவனே தேவர் சிங்கமே
பத்தா பத்தர் பலர்போற்றும் பரமா பழைய னூர்மேய
அத்தா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே. 7.52.1

531
பொய்யே செய்து புறம்புறமே திரிவேன் றன்னைப் போகாமே
மெய்யே வந்திங் கெனையாண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே
பையா டரவம் அரைக்கசைத்த பரமா பழைய னூர்மேய
ஐயா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே. 7.52.2

532 தூண்டா விளக்கின் நற்சோதீ தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்
பூண்டாய் எலும்பைப் புரமூன்றும் பொடியாச் செற்ற புண்ணியனே
பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும் பரமா பழைய னூர்மேய
ஆண்டா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே. 7.52.3

533
மறிநேர் ஒண்கண் மடநல்லார் வலையிற் பட்டு மதிமயங்கி
அறிவே அழிந்தே னையாநான் மையார் கண்ட முடையானே
பறியா வினைக ளவைதீர்க்கும் பரமா பழைய னூர்மேய
அறிவே ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே. 7.52.4

534
வேலங் காடு தடங்கண்ணார் வலையுட் பட்டுன் நெறிமறந்து
மாலங் காடி மறந்தொழிந்தேன் மணியே முத்தே மரகதமே
பாலங் காடி நெய்யாடி படர்புன் சடையாய் பழையனூர்
ஆலங் காடா உன்னுடைய அடியார்க் கடியேன் ஆவேனே. 7.52.5

535
எண்ணார் தங்கள் எயிலெய்த எந்தாய் எந்தை பெருமானே
கண்ணாய் உலகங் காக்கின்ற கருத்தா திருத்த லாகாதாய்
பண்ணா ரிசைக ளவைகொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்
அண்ணா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே. 7.52.6

536
வண்டார் குழலி உமைநங்கை பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்க ளெரிசெய்த விடையாய் வேத நெறியானே
பண்டாழ் வினைகள் பலதீர்க்கும் பரமா பழைய னூர்மேய
அண்டா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே. 7.52.7

537
பேழ்வா யரவி னணையானும் பெரிய மலர்மே லுறைவானுந்
தாழா துன்றன் சரண்பணியத் தழலாய் நின்ற தத்துவனே
பாழாம் வினைக ளவைதீர்க்கும் பரமா பழையனூர் தன்னை
ஆள்வாய் ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே. 7.52.8

538
எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழேழ் படிகால் எமையாண்ட
பெம்மான் ஈமப் புறங்காட்டிற் பேயோ டாடல் புரிவானே
பன்மா மலர்க ளவைகொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்
அம்மா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே. 7.52.9

539
பத்தர் சித்தர் பலரேத்தும் பரமன் பழைய னூர்மேய
அத்தன் ஆலங் காடன்றன் அடிமைத் திறமே அன்பாகிச்
சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச் சிறுவன் ஊரன் ஒண்டமிழ்கள்
பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே. 7.52.10

திருச்சிற்றம்பலம்