சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.053 திருக்கடவூர் மயானம்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பிரமபுரீசுவரர், தேவியார் – மலர்க்குழல்மின்னம்மை


பண் – பழம்பஞ்சுரம்

540
மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந் தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. 7.53.1

541
விண்ணோர் தலைவர் வெண்புரிநூல் மார்பர் வேத கீதத்தர்
கண்ணார் நுதலர் நகுதலையர் கால காலர் கடவூரர்
எண்ணார் புரமூன் றெரிசெய்த இறைவ ருமையோ ரொருபாகம்
பெண்ணா ணாவர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. 7.53.2

542
காயும் புலியின் அதளுடையர் கண்டர் எண்டோ ட் கடவூரர்
தாயுந் தந்தை பல்லுயிர்க்குந் தாமே யாய தலைவனார்
பாயும் விடையொன் றதுவேறிப் பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. 7.53.3
543
நறைசேர் மலரைங் கணையானை நயனத் தீயாற் பொடிசெய்த
இறையா ராவர் எல்லார்க்கும் இல்லை யென்னா தருள்செய்வார்
பறையார் முழவம் பாட்டோடு பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப்
பிறையார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. 7.53.4

544
கொத்தார் கொன்றை மதிசூடிக் கோள்நா கங்கள் பூணாக
மத்த யானை உரிபோர்த்து மருப்பும் ஆமைத் தாலியார்
பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆடப் பலிகொள்ளும்
பித்தர் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. 7.53.5

545
துணிவார் கீளுங் கோவணமுந் துதைந்து சுடலைப் பொடியணிந்து
பணிமே லிட்ட பாசுபதர் பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்
திணிவார் குழையார் புரமூன்றுந் தீவாய்ப் படுத்த சேவகனார்
பிணிவார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. 7.53.6

546
காரார் கடலின் நஞ்சுண்ட கண்டர் கடவூர் உறைவாணர்
தேரார் அரக்கன் போய்வீழ்ந்து சிதைய விரலா லூன்றினார்
ஊர்தான் ஆவ துலகேழும் உடையார்க் கொற்றி யூராரூர்
பேரா யிரவர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. 7.53.7

547
வாடா முலையாள் தன்னோடும் மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்
கோடார் கேழற் பின்சென்று குறுகி விசயன் தவமழித்து
நாடா வண்ணஞ் செருச்செய்து ஆவ நாழி நிலையருள்செய்
பீடார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. 7.53.8

548
வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரமறுப்பர்
ஆழி அளிப்பர் அரிதனக்கன் றானஞ் சுகப்பர் அறமுரைப்பர்
ஏழைத் தலைவர் கடவூரில் இறைவர் சிறுமான் மறிக்கையர்
பேழைச் சடையர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. 7.53.9

549
மாட மல்கு கடவூரில் மறையோ ரேத்தும் மயானத்துப்
பீடை தீர அடியாருக் கருளும் பெருமா னடிகள்சீர்
நாடி நாவ லாரூரன் நம்பி சொன்ன நற்றமிழ்கள்
பாடு மடியார் கேட்பார்மேற் பாவ மான பறையுமே. 7.53.10

திருச்சிற்றம்பலம்