சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.075 திருவானைக்கா


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சம்புகேசுவரர்,
தேவியார் – அகிலாண்டநாயகியம்மை


பண் – காந்தாரம்

761
மறைகள் ஆயின நான்கும் மற்றுள பொருள்களு மெல்லாந்
துறையுந் தோத்திரத் திறையுந் தொன்மையும் நன்மையு மாய
அறையும் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே. 7.75.1

762
வங்கம் மேவிய வேலை நஞ்செழ வஞ்சர்கள் கூடித்
தங்கள் மேல்அட ராமை உண்ணென உண்டிருள் கண்டன்
அங்கம் ஓதிய ஆனைக் காவுடை ஆதியை நாளும்
எங்கள் ஈசனென் பார்கள் எம்மையும் ஆளுடை யாரே. 7.75.2

763
நீல வண்டறை கொன்றை நேரிழை மங்கையோர் திங்கள்
சால வாளர வங்கள் தங்கிய செஞ்சடை எந்தை
ஆல நீழலுள் ஆனைக் காவுடை ஆதியை நாளும்
ஏலு மாறுவல் லார்கள் எம்மையும் ஆளுடை யாரே. 7.75.3

764
தந்தை தாயுல குக்கோர் தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்
பந்த மாயின பெருமான் பரிசுடை யவர்திரு வடிகள்
அந்தண் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும்
எந்தை என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே. 7.75.4

765
கணைசெந் தீயர வந்நாண் கல்வளை யுஞ்சிலை யாகத்
துணைசெய் மும்மதில் மூன்றுஞ் சுட்டவ னேயுல குய்ய
அணையும் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும்
இணைகொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே. 7.75.5

766
விண்ணின் மாமதி சூடி விலையிலி கலன்அணி விமலன்
பண்ணின் நேர்மொழி மங்கை பங்கினன் பசுவுகந் தேறி
அண்ண லாகிய ஆனைக் காவுடை ஆதியை நாளும்
எண்ணு மாறுவல் லார்கள் எம்மையும் ஆளுடை யாரே. 7.75.6

767
தார மாகிய பொன்னித் தண்டுறை ஆடி விழுத்தும்
நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே
ஆரங் கொண்டவெம் மானைக் காவுடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடை யாரே. 7.75.7

768
உரவம் உள்ளதோர் உழையின் உரிபுலி அதளுடை யானை
விரைகொள் கொன்றையி னானை விரிசடை மேற்பிறை யானை
அரவம் வீக்கிய ஆனைக் காவுடை ஆதியை நாளும்
இரவும் எல்லியும் பகலும் ஏத்துவார் எமையுடை யாரே. 7.75.8

769
வலங்கொள் வாரவர் தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து
கலங்கக் காலனைக் காலாற் காமனைக் கண்சிவப் பானை
அலங்கல் நீர்பொரும் ஆனைக் காவுடை ஆதியை நாளும்
இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே. 7.75.9

770
ஆழி யாற்கருள் ஆனைக் காவுடை ஆதிபொன் னடியின்
நீழ லேசர ணாக நின்றருள் கூர நினைந்து
வாழ வல்லவன் றொண்டன் வண்டமிழ் மாலைவல் லார்போய்
ஏழு மாபிறப் பற்று எம்மையும் ஆளுடை யாரே. 7.75.10

திருச்சிற்றம்பலம்