சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.076 திருவாஞ்சியம்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சுகவாஞ்சிநாதர்,
தேவியார் – வாழவந்தநாயகி


பண் – பியந்தைக்காந்தாரம்

771
பொருவ னார்புரி நூலர் புணர்முலை உமையவ ளோடு
மருவ னார்மரு வார்பால் வருவதும் இல்லைநம் அடிகள்
திருவ னார்பணிந் தேத்துந் திகழ்திரு வாஞ்சியத் துறையும்
ஒருவ னார்அடி யாரை ஊழ்வினை நலிய வொட்டாரே. 7.76.1

772
தொறுவில் ஆனிள ஏறு துண்ணென இடிகுரல் வெருவிச்
செறுவில் வாளைகள் ஓடச் செங்கயல் பங்கயத் தொதுங்கக்
கறுவி லாமனத் தார்கள் காண்டகு வாஞ்சியத் தடிகள்
மறுவி லாதவெண் ணீறு பூசுதல் மன்னுமொன் றுடைத்தே. 7.76.2

773
தூர்த்தர் மூவெயி லெய்து சுடுநுனைப் பகழிய தொன்றாற்
பார்த்த னார்திரள் தோள்மேற் பன்னுனைப் பகழிகள் பாய்ச்சித்
தீர்த்த மாமலர்ப் பொய்கைத் திகழ்திரு வாஞ்சியத் தடிகள்
சாத்து மாமணிக் கச்சங் கொருதலை பலதலை யுடைத்தே. 7.76.3

774
சள்ளை வெள்ளையங் குருகு தானது வாமெனக் கருதி
வள்ளை வெண்மலர் அஞ்சி மறுகியோர் வாளையின் வாயில்
துள்ளு தெள்ளுநீர்ப் பொய்கைத் துறைமல்கு வாஞ்சியத் தடிகள்
வெள்ளை நுண்பொடிப் பூசும் விகிர்தமொன் றொழிகிலர் தாமே. 7.76.4

775
மைகொள் கண்டர்எண் டோ ளர் மலைமக ளுடனுறை வாழ்க்கைக்
கொய்த கூவிள மாலை குலவிய சடைமுடிக் குழகர்
கைதை நெய்தலங் கழனி கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள்
பைதல் வெண்பிறை யோடு பாம்புடன் வைப்பது பரிசே. 7.76.5

776
கரந்தை கூவிள மாலை கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்
பரந்த பாரிடஞ் சூழ வருவர்நம் பரமர்தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு திகழ்திரு வாஞ்சியத் துறையும்
மருந்த னார்அடி யாரை வல்வினை நலிய வொட்டாரே. 7.76.6

777
அருவி பாய்தரு கழனி அலர்தரு குவளையங் கண்ணார்
குருவி யாய்கிளி சேப்பக் குருகினம் இரிதரு கிடங்கிற்
பருவ ரால்குதி கொள்ளும் பைம்பொழில் வாஞ்சியத் துறையும்
இருவ ராலறி யொண்ணா இறைவன தறைகழல் சரணே. 7.76.7

778
களங்க ளார்தரு கழனி அளிதரக் களிதரு வண்டு
உளங்க ளார்கலிப் பாடல் உம்பரில் ஒலித்திடுங் காட்சி
குளங்க ளானிழற் கீழ்நற் குயில்பயில் வாஞ்சியத் தடிகள்
விளங்கு தாமரைப் பாதம் நினைப்பவர் வினைநலி விலரே. 7.76.8

779
வாழை யின்கனி தானும் மதுவிம்மு வருக்கையின் சுளையுங்
கூழை வானரந் தம்மிற் கூறிது சிறிதெனக் குழறித்
தாழை வாழையந் தண்டாற் செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்
ஏழை பாகனை யல்லால் இறையெனக் கருதுத லிலமே. 7.76.9

780
செந்நெ லங்கலங் கழனித் திகழ்திரு வாஞ்சியத் துறையும்
மின்ன லங்கலஞ் சடையெம் இறைவன தறைகழல் பரவும்
பொன்ன லங்கனல் மாடப் பொழிலணி நாவலா ரூரன்
பன்ன லங்கனல் மாலை பாடுமின் பத்தரு ளீரே. 7.76.10

திருச்சிற்றம்பலம்