சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.100 திருநொடித்தான்மலை


திருச்சிற்றம்பலம்


பண் – பஞ்சமம்

1017
தானெனை முன்படைத் தானத றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந் தோநாயி னேனைப் பொருட்படுத்து
வானெனை வந்தெதிர் கொள்ளமத் தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய் தான்நொடித் தான்மலை உத்தமனே. 7.100.1

1018
ஆனை உரித்த பகைஅடி யேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட் டிஒள்ளி யானை நினைந்திருந்தேன்
வானை மதித்தம ரர்வலஞ் செய்தெனை ஏறவைக்க
ஆனை அருள்புரிந் தான்நொடித் தான்மலை உத்தமனே. 7.100.2

1019
மந்திரம் ஒன்றறி யேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்க ளாற்றுரி சேசெயுந் தொண்டனெனை
அந்தர மால்விசும் பில்அழ கானை அருள்புரிந்த
துந்தர மோநெஞ்ச மேநொடித் தான்மலை உத்தமனே. 7.100.3

1020
வாழ்வை உகந்தநெஞ் சேமட வார்தங்கள் வல்வினைப்பட்
டாழ முகந்தவென் னைஅது மாற்றி அமரரெல்லாஞ்
சூழ அருள்புரிந் துதொண்ட னேன்பரம் அல்லதொரு
வேழம் அருள்புரிந் தான்நொடித் தான்மலை உத்தமனே. 7.100.4

1021
மண்ணுல கிற்பிறந் துநும்மை வாழ்த்தும் வழியடியார்
பொன்னுல கம்பெறு தல்தொண்ட னேனின்று கண்டொழிந்தேன்
விண்ணுல கத்தவர் கள்விரும் பவெள்ளை யானையின்மேல்
என்னுடல் காட்டுவித் தான்நொடித் தான்மலை உத்தமனே. 7.100.5

1022
அஞ்சினை ஒன்றிநின் றுஅலர் கொண்டடி சேர்வறியா
வஞ்சனை யென்மன மேவைகி வானநன் னாடர்முன்னே
துஞ்சுதல் மாற்றுவித் துத்தொண்ட னேன்பர மல்லதொரு
வெஞ்சின ஆனைதந் தான்நொடித் தான்மலை உத்தமனே. 7.100.6

1023
நிலைகெட விண்ணதி ரநில மெங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானையே றிவழி யேவரு வேன்எதிரே
அலைகட லால்அரை யன்அலர் கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண் ணம்நொடித் தான்மலை உத்தமனே. 7.100.7

1024
அரவொலி ஆகமங் கள்அறி வாரறி தோத்திரங்கள்
விரவிய வேதஒ லிவிண்ணெ லாம்வந் தெதிர்ந்திசைப்ப
வரமலி வாணன்வந் துவழி தந்தெனக் கேறுவதோர்
சிரமலி யானைதந் தான்நொடித் தான்மலை உத்தமேனே. 7.100.8

1025
இந்திரன் மால்பிர மன்னெழி லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த யானை அருள்புரிந்து
மந்திர மாமுனி வர்இவ னாரென எம்பெருமன்
நந்தமர் ஊரனென் றான்நொடித் தான்மலை உத்தமனே. 7.100.9

1026
ஊழிதோ றூழிமுற் றுமுயர் பொன்னொடித் தான்மலையைச்
சூழிசை யின்கரும் பின்சுவை நாவல ஊரன்சொன்ன
ஏழிசை இன்றமி ழால்இசைந் தேத்திய பத்தினையும்
ஆழி கடலரை யாஅஞ்சை யப்பர்க் கறிவிப்பதே.
* நொடித்தான்மலையென்பது – கயிலைமலை. 7.100.10

திருச்சிற்றம்பலம்