சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.73 திருவாரூர்


திருச்சிற்றம்பலம்


பண் – காந்தாரம்

740
கரையுங் கடலும் மலையுங் காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திர லோகன்
வரையின் மடமகள் கேள்வன் வானவர் தானவர்க் கெல்லாம்
அரையனி ருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.1

741
தனியனென் றெள்கி அறியேன் தம்மைப் பெரிது முகப்பன்
முனிபவர் தம்மை முனிவன் முகம்பல பேசி மொழியேன்
கனிகள் பலவுடைச் சோலைக் காய்க்குலை ஈன்ற கமுகின்
இனிய னிருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.2

742
சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன் தொடர்ந்தவர்க் குந்துணை அல்லேன்
கல்லில் வலிய மனத்தேன் கற்ற பெரும்புல வாணர்
அல்லல் பெரிதும் அறுப்பான் அருமறை ஆறங்கம் ஓதும்
எல்லை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.3

743
நெறியும் அறிவுஞ் செறிவும் நீதியும் நான்மிகப் பொல்லேன்
மிறையுந் தறியும் உகப்பன் வேண்டிற்றுச் செய்து திரிவன்
பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செஞ்சடை வைத்த
இறைவன் இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.4

744
நீதியில் ஒன்றும் வழுவேன் நிட்கண் டகஞ்செய்து வாழ்வேன்
வேதியர் தம்மை வெகுளேன் வெகுண்டவர்க் குந்துணை ஆகேன்
சோதியிற் சோதிஎம் மானைச் சுண்ணவெண் ணீறணிந் திட்ட
ஆதி இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.5

745
அருத்தம் பெரிதும் உகப்பேன் அலவலை யேன்அலந் தார்கள்
ஒருத்தர்க் குதவியேன் அல்லேன் உற்றவர்க் குந்துணை அல்லேன்
பொருத்தமே லொன்று மிலாதேன் புற்றெடுத் திட்டிடங் கொண்ட
அருத்தன் இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.6

746
சந்தம் பலஅறுக் கில்லேன் சார்ந்தவர் தம்மடிச் சாரேன்
முந்திப் பொருவிடை யேறி மூவுல குந்திரி வானே
கந்தங் கமழ்கொன்றை மாலைக் கண்ணியன் விண்ணவ ரேத்தும்
எந்தை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.7

747
நெண்டிக் கொண்டேயுங் கிலாய்ப்பன் நிச்சய மேயிது திண்ணம்
மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன் மெய்ப்பொரு ளன்றி உணரேன்
பண்டங் கிலங்கையர் கோனைப் பருவரைக் கீழடர்த் திட்ட
அண்டன் இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.8

748
நமர்பிறர் என்ப தறியேன் நான்கண்ட தேகண்டு வாழ்வேன்
தமரம் பெரிதும் உகப்பன் தக்கவா றொன்றும் இலாதேன்
குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும்
அமரன் இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.9

749
ஆசை பலஅறுக் கில்லேன் ஆரையும் அன்றி உரைப்பேன்
பேசிற் சழக்கலாற் பேசேன் பிழைப்புடை யேன்மனந் தன்னால்
ஓசை பெரிதும் உகப்பேன் ஒலிகடல் நஞ்சமு துண்ட
ஈசன் இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர். 7.73.10

750
எந்தை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ என்று
சிந்தை செயுந்திறம் வல்லான் திருமரு வுந்திரள் தோளான்
மந்த முழவம் இயம்பும் வளவயல் நாவலா ரூரன்
சந்தம் இசையொடும் வல்லார் தாம்புகழ் எய்துவார் தாமே. 7.73.11

திருச்சிற்றம்பலம்