சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.77 திருவையாறு


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – செம்பொற்சோதியீசுவரர்,
தேவியார் – அறம் வளர்த்த நாயகியம்மை


பண் – காந்தாரபஞ்சமம்

781
பரவும் பரிசொன் றறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன்நான்
கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. 7.77.1

782
எங்கே போவே னாயிடினும் அங்கே வந்தென் மனத்தீராய்ச்
சங்கை யொன்றும் இன்றியே தலைநாள் கடைநாள் ஒக்கவே
கங்கை சடைமேற் கரந்தானே கலைமான் மறியுங் கனல்மழுவுந்
தங்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. 7.77.2

783
மருவிப் பிரிய மாட்டேன்நான் வழிநின் றொழிந்தேன் ஒழிகிலேன்
பருவி விச்சி மலைச்சாரற் பட்டை கொண்டு பகடாடிக்
குருவி ஓப்பிக் கிளிகடிவார் குழன்மேல் மாலை கொண்டோ ட்டந்
தரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. 7.77.3

784
பழகா நின்று பணிசெய்வார் பெற்ற பயனொன் றறிகிலேன்
இகழா துமக்காட் பட்டோ ர்க்கு வேக படமொன் றரைச்சாத்தி
குழகா வாழைக் குலைத்தெங்கு கொணர்ந்து கரைமேல் எறியவே
அழகார் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. 7.77.4

785
பிழைத்த பிழையொன் றறியேன்நான் பிழையைத் தீரப் பணியாயே
மழைக்கண் நல்லார் குடைந்தாட மலையும் நிலனுங் கொள்ளாமைக்
கழைக்கொள் பிரசங் கலந்தெங்குங் கழனி மண்டிக் கையேறி
அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. 7.77.5

786
கார்க்கொள் கொன்றைச் சடைமேலொன் றுடையாய் விடையாய் கையினால்
மூர்க்கர் புரமூன் றெரிசெய்தாய் முன்னீ பின்னீ முதல்வன்நீ
வார்க்கொள் அருவி பலவாரி மணியும் முத்தும் பொன்னுங்கொண்
டார்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. 7.77.6

787
மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப் பற்றி உலகம் பலிதேர்வாய்
சிலைக்கொள் கணையால் எயிலெய்த செங்கண் விடையாய் தீர்த்தன்நீ
மலைக்கொள் ளருவி பலவாரி மணியும் முத்தும் பொன்னுங்கொண்
டலைக்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. 7.77.7

788
போழும் மதியும் புனக்கொன்றைப் புனல்சேர் சென்னிப் புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச்சோதீ உன்னைத் தொழுவார் துயர்போக
வாழு மவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழுந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. 7.77.8

789
கதிர்கொள் பசியே ஒத்தேநான் கண்டேன் உம்மைக் காணாதேன்
எதிர்த்து நீந்த மாட்டேன்நான் எம்மான் றம்மான் றம்மானே
விதிர்த்து மேகம் மழைபொழிய வெள்ளம் பரந்து நுரைசிதறி
அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. 7.77.9

790
கூசி அடியார் இருந்தாலுங் குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
தேச வேந்தன் திருமாலும் மலர்மேல் அயனுங் காண்கிலாத்
தேச மெங்குந் தெளித்தாடத் தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும்
வாசந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. 7.77.10

791
கூடி அடியார் இருந்தாலுங் குணமொன் றில்லீர் குறிப்பில்லீர்
ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மைத் தொண்டன் ஊரனேன்
தேடி யெங்குங் காண்கிலேன் திருவா ரூரே சிந்திப்பன்
ஆடுந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ. 7.77.11

திருச்சிற்றம்பலம்