சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.86 திருவன்பார்த்தான் பனங்காட்டூர்


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பனங்காட்டீசுவரர், தேவியார் – அமிர்தவல்லியம்மை


பண் – சீகாமரம்

872
விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை
அடையில்அன் புடையானை யாவர்க்கும் அறியொண்ணா
மடையில்வா ளைகள்பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
சடையிற்கங்கை தரித்தானைச் சாராதார் சார்பென்னே. 7.86.1

873
அறையும்பைங் கழலார்ப்ப அரவாட அனலேந்திப்
பிறையுங்கங் கையுஞ்சூடிப் பெயர்ந்தாடும் பெருமானார்
பறையுஞ்சங் கொலிஓவாப் படிறன்றன் பனங்காட்டூர்
உறையுமெங்கள் பிரானாரை உணராதார் உணர்வென்னே. 7.86.2

874
தண்ணார்மா மதிசூடித் தழல்போலுந் திருமேனிக்
கெண்ணார்நாண் மலர்கொண்டங் கிசைந்தேத்தும் அடியார்கள்
பண்ணார்பா டல்அறாத படிறன்றன் பனங்காட்டூர்ப்
பெண்ணாணா யபிரானைப் பேசாதார் பேச்சென்னே. 7.86.3

875
நெற்றிக்கண் ணுடையானை நீறேறுந் திருமேனிக்
குற்றமில் குணத்தானைக் கோணாதார் மனத்தானைப்
பற்றிப்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்ப்
பெற்றொன்றே றும்பிரானைப் பேசாதார் பேச்சென்னே. 7.86.4

876
உரமென்னும் பொருளானை உருகிலுள் ளுறைவானைச்
சிரமென்னுங் கலனானைச் செங்கண்மால் விடையானை
வரம்முன்ன மருள்செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
பரமன்எங் கள்பிரானைப் பரவாதார் பரவென்னே. 7.86.5

877
எயிலார்பொக் கம்எரித்த எண்டோ ள்முக் கண்இறைவன்
வெயிலாய்க்காற் றெனவீசி மின்னாய்த்தீ எனநின்றான்
மயிலார்சோ லைகள்சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
பயில்வானுக் கடிமைக்கட் பயிலாதார் பயில்வென்னே. 7.86.6

878
மெய்யன்வெண் பொடிபூசும் விகிர்தன்வே தமுதல்வன்
கையில்மான் மழுவேந்திக் காலன்கா லம்அறுத்தான்
பைகொள்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்
ஐயன்எங் கள்பிரானை அறியாதார் அறிவென்னே. 7.86.7

879
வஞ்சமற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியைப்
பஞ்சிச்சீ றடியாளைப் பாகம்வைத் துகந்தானை
மஞ்சுற்ற மணிமாட வன்பார்த்தான் பனங்காட்டூர்
நெஞ்சத்தெங் கள்பிரானை நினையாதார் நினைவென்னே. 7.86.8

880
மழையானுந் திகழ்கின்ற மலரோனென் றிருவர்தாம்
உழையாநின் றவருள்க உயர்வானத் துயர்வானைப்
பழையானைப் பனங்காட்டூர் பதியாகத் திகழ்கின்ற
குழைகாதற் கடிமைக்கட் குழையாதார் குழைவென்னே. 7.86.9

881
பாரூரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானைச்
சீரூருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் அடித்தொண்டன் அடியன்சொல் அடிநாய்சொல்
ஊரூரன் உரைசெய்வார் உயர்வானத் துயர்வாரே. 7.86.10

திருச்சிற்றம்பலம்