சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.88 திருவீழிமிழலை


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வீழியழகர்,
தேவியார் – சுந்தரகுசாம்பிகையம்மை


பண் – சீகாமரம்

892
நம்பினார்க்கருள் செய்யுமந்தணர் நான்மறைக்கிட மாயவேள்வியுள்
செம்பொ னேர்மடவாரணி பெற்ற திருமிழலை
உம்பரார்தொழு தேத்தமாமலை யாளொடும்முட னேஉறைவிடம்
அம்பொன் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. 7.88.1

893
விடங்கொள்மாமிடற் றீர்வெள்ளைச்சுருளொன் றிட்டுவிட்ட காதினீரென்று
திடங்கொள் சிந்தையினார் கலிகாக்குந் திருமிழலை
மடங்கல்பூண்டவி மானம்மண்மிசை வந்திழிச்சிய வானநாட்டையும்
அடங்கல் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. 7.88.2

894
ஊனைஉற்றுயிர் ஆயினீரொளி மூன்றுமாய்த்தெளி நீரோடானஞ்சின்
தேனை ஆட்டுகந்தீர் செழுமாடத் திருமிழலை
மானைமேவிய கையினீர்மழு வேந்தினீர்மங்கை பாகத்தீர்விண்ணில்
ஆன வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. 7.88.3

895
பந்தம்வீடிவை பண்ணினீர்படி றீர்மதிப்பிதிர்க் கண்ணியீரென்று
சிந்தை செய்திருக்குஞ் செங்கையாளர் திருமிழலை
வந்துநாடகம் வானநாடியர் ஆடமாலயன் ஏத்தநாடொறும்
அந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. 7.88.4

896
புரிசைமூன்றையும் பொன்றக்குன்றவில் லேந்திவேதப் புரவித்தேர்மிசைத்
திரிசெய் நான்மறையோர் சிறந்தேத்துந் திருமிழலைப்
பரிசினாலடி போற்றும்பத்தர்கள் பாடியாடப் பரிந்துநல்கினீர்
அரிய வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. 7.88.5

897
எறிந்தசண்டி இடந்தகண்ணப்பன் ஏத்துபத்தர்கட் கேற்றம்நல்கினீர்
செறிந்த பூம்பொழில் தேன்துளிவீசுந் திருமிழலை
நிறைந்தஅந்தணர் நித்தநாடொறும் நேசத்தாலுமைப் பூசிக்கும்மிடம்
அறிந்து வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. 7.88.6

898
பணிந்தபார்த்தன் பகீரதன்பல பத்தர்சித்தர்க்குப் பண்டுநல்கினீர்
திணிந்த மாடந்தொறுஞ் செல்வம்மல்கு திருமிழலை
தணிந்தஅந்தணர் சந்திநாடொறும் அந்திவானிடு பூச்சிறப்பவை
அணிந்து வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. 7.88.7

899
பரந்தபாரிடம் ஊரிடைப்பலி பற்றிப்பார்த்துணுஞ் சுற்றமாயினீர்
தெரிந்த நான்மறை யோர்க்கிடமாய திருமிழலை
இருந்துநீர்தமி ழோடிசைகேட்கும் இச்சையாற்காசு நித்தல்நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. 7.88.8

900
தூயநீரமு தாயவாறது சொல்லுகென்றுமைக் கேட்கச்சொல்லினீர்
தீயராக் குலையாளர் செழுமாடத் திருமிழலை
மேயநீர்பலி ஏற்றதென்னென்று விண்ணப்பஞ்செய் பவர்க்குமெய்ப்பொருள்
ஆய வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே. 7.88.9

901
வேதவேதியர் வேதநீதியர் ஓதுவார்விரி நீர்மிழலையுள்
ஆதி வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுகென்று
நாதகீதம்வண் டோ துவார்பொழில் நாவலூரன்வன் றொண்டன்நற்றமிழ்
பாதம் ஓதவல்லார் பரனோடு கூடுவரே. 7.88.10

திருச்சிற்றம்பலம்