சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.89 திருவெண்பாக்கம்


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இது திருவிளம்பூதூரென்று வழங்குகிறது.
சுவாமிபெயர் – வெண்பாக்கத்தீசுவரர், தேவியார் – கனிவாய்மொழியம்மை.


பண் – சீகாமரம்

902
பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்காற்
பழியதனைப் பாராதே படலமென்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா கோயிலுளா யேயென்ன
உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர் என்றானே. 7.89.1

903
இடையறியேன் தலையறியேன் எம்பெருமான் சரணமென்பேன்
அடையுடையன் நம்மடியான் என்றவற்றைப் பாராதே
விடையுடையான் விடநாகன் வெண்ணீற்றன் புலியின்றோல்
உடையுடையான் எனையுடையான் உளோம்போகீர் என்றானே. 7.89.2

904
செய்வினையொன் றறியாதேன் திருவடியே சரணென்று
பொய்யடியேன் பிழைத்திடினும் பொறுத்திடநீ வேண்டாவோ
பையரவா இங்கிருந்தா யோவென்னப் பரிந்தென்னை
உய்யஅருள் செய்யவல்லான் உளோம்போகீர் என்றானே. 7.89.3

905
கம்பமருங் கரியுரியன் கறைமிடற்றன் காபாலி
செம்பவளத் திருவுருவன் சேயிழையோ டுடனாகி
நம்பியிங்கே இருந்தீரே என்றுநான் கேட்டலுமே
உம்பர்தனித் துணையெனக்கு உளோம்போகீர் என்றானே. 7.89.4

906
பொன்னிலங்கு நறுங்கொன்றை புரிசடைமேற் பொலிந்திலங்க
மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகமா எருதேறித்
துன்னியிரு பால்அடியார் தொழுதேத்த அடியேனும்
உன்னதமாய்க் கேட்டலுமே உளோம்போகீர் என்றானே. 7.89.5

907
கண்ணுதலாற் காமனையுங் காய்ந்ததிறற் கங்கைமலர்
தெண்ணிலவு செஞ்சடைமேல் தீமலர்ந்த கொன்றையினான்
கண்மணியை மறைப்பித்தாய் இங்கிருந்தா யோவென்ன
ஒண்ணுதலி பெருமானார் உளோம்போகீர் என்றானே. 7.89.6

908
பார்நிலவு மறையோரும் பத்தர்களும் பணிசெய்யத்
தார்நிலவு நறுங்கொன்றைச் சடையனார் தாங்கரிய
கார்நிலவு மணிமிடற்றீர் இங்கிருந்தீ ரேயென்ன
ஊரரவம் அரைக்கசைத்தான் உளோம்போகீர் என்றானே. 7.89.7

909
வாரிடங்கொள் வனமுலையாள் தன்னோடு மயானத்துப்
பாரிடங்கள் பலசூழப் பயின்றாடும் பரமேட்டி
காரிடங்கொள் கண்டத்தன் கருதுமிடந் திருஒற்றி
யூரிடங்கொண் டிருந்தபிரான் உளோம்போகீர் என்றானே. 7.89.8

910
பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க்கீ ழிருவென்று
சொன்னஎனைக் காணாமே சூளறவு மகிழ்க்கீழே
என்னவல்ல பெருமானே இங்கிருந்தா யோவென்ன
ஒன்னலரைக் கண்டாற்போல் உளோம்போகீர் என்றானே. 7.89.9

911
மான்றிகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாந்
தோன்றஅருள் செய்தளித்தாய் என்றுரைக்க உலகமெலாம்
ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தா யோவென்ன
ஊன்றுவதோர் கோலருளி உளோம்போகீர் என்றானே. 7.89.10

912
ஏராரும் பொழில்நிலவு வெண்பாக்கம் இடங்கொண்ட
காராறும் மிடாற்றானைக் காதலித்திட் டன்பினொடுஞ்
சீராருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த
ஆரூரன் தமிழ்வல்லார்க் கடையாவல் வினைதானே. 7.89.11

திருச்சிற்றம்பலம்