சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.95 திருவாரூர்


காஞ்சீபுரத்தில் ஆலந்தானெனும் பதிகமோதி ஒருகண்பெற்று,
இந்தத்தலத்தில் இந்தப்பதிகமோதி மற்றொரு கண்ணும் பெற்றது


பண் – செந்துருத்தி

964
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளா யிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே. 7.95.1

965
விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்ற மொன்றுஞ் செய்த தில்லை கொத்தை ஆக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே. 7.95.2

966
அன்றில் முட்டா தடையுஞ் சோலை ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி யவைபோல
என்றும் முட்டாப் பாடும் அடியார் தங்கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதீரே. 7.95.3

967
துருத்தி உறைவீர் பழனம் பதியாச் சோற்றுத் துறையாள்வீர்
இருக்கை திருவா ரூரே உடையீர் மனமே எனவேண்டா
அருத்தி யுடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்து போதீரே. 7.95.4

968
செந்தண் பவளந் திகழுஞ் சோலை இதுவோ திருவாரூர்
எந்தம் அடிகேள் இதுவே ஆமா றுமக்காட் பட்டோ ர்க்குச்
சந்தம் பலவும் பாடும் அடியார் தங்கண் காணாது
வந்தெம் பெருமான் முறையோ வென்றால் வாழ்ந்து போதீரே. 7.95.5

969
தினைத்தா ளன்ன செங்கால் நாரை சேருந் திருவாரூர்ப்
புனைத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப் புரிபுன் சடையீரே
தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து தங்கண் காணாது
மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்து போதீரே. 7.95.6

970
ஆயம் பேடை அடையுஞ் சோலை ஆரூர் அகத்தீரே
ஏயெம் பெருமான் இதுவே ஆமா றுமக்காட் பட்டோ ர்க்கு
மாயங் காட்டிப் பிறவி காட்டி மறவா மனங்காட்டிக்
காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால் வாழ்ந்து போதீரே. 7.95.7

971
கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க் கலந்த சொல்லாகி
இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை இகழா தேத்துவோம்
பழிதா னாவ தறியீர் அடிகேள் பாடும் பத்தரோம்
வழிதான் காணா தலமந் திருந்தால் வாழ்ந்து போதீரே. 7.95.8

972
பேயோ டேனும் பிரிவொன் றின்னா தென்பர் பிறரெல்லாங்
காய்தான் வேண்டிற் கனிதா னன்றோ கருதிக் கொண்டக்கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்காட் பட்டோ ர்க்கு
வாய்தான் திறவீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே. 7.95.9

973
செருந்தி செம்பொன் மலருஞ் சோலை இதுவோ திருவாரூர்
பொருந்தித் திருமூ லத்தா னம்மே இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றுங் கிடந்தும் உம்மை இகழா தேத்துவோம்
வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால் வாழ்ந்து போதிரே. 7.95.10

974
காரூர் கண்டத் தெண்டோ ள் முக்கண் கலைகள் பலவாகி
ஆரூர்த் திருமூ லத்தா னத்தே அடிப்பே ராரூரன்
பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
வாரூர் முலையாள் பாகங் கொண்டீர் வாழ்ந்து போதீரே. 7.95.11

திருச்சிற்றம்பலம்