சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய எட்டாம் திருமுறை

திருவாசகம் – திருக்கோவையார்

76 பதிகங்கள் – 1058 பாடல்கள் 


23. செத்திலாப் பத்து


சிவானந்தம் – அளவறுக்கொணாமை
(தில்லையில் அருளியது – எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)


பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமு தூறும்
புதும லர்க்கழ லிணையடி பிரிந்துங்
கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ
விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன்
ஐயனே அரசே அருட்பெருங் கடலே
அத்த னேஅயன் மாற்கறி யொண்ணாச்
செய்யமே னியனே செய்வகை அறியேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.398

புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
உண்டி யாய்அண்ட வாணரும் பிறரும்
வற்றி யாரும்நின் மலரடி காணா
மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
பற்றினாய் பதையேன் மனம்மிக உருகேன்
பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச்
செற்றி லேன்இன்னுந் திரிதரு கின்றேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. . 399

புலைய னேனையும் பொருளென நினைந்துன்
அருள்பு ரிந்தனை புரிதலுங் களித்துத்
தலையி னால்நடந் தேன்விடைப் பாகா
சங்க ராஎண்ணில் வானவர்க் கெல்லாம்
நிலைய னேஅலை நீர்விட முண்ட
நித்த னேஅடை யார்புர மெரித்த
சிலைய னேஎனைச் செத்திடப் பணியாய்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. . 400

அன்ப ராகிமற் றருந்தவம் முயல்வார்
அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம்
என்ப ராய்நினை வார்எ னைப்பலர்
நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய்
வன்ப ராய்முரு டொக்கும்என் சிந்தை
மரக்கண் என்செவி இரும்பினும் வலிது
தென்ப ராய்த்துறை யாய்சிவ லோகா
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.. 401

ஆட்டுத் தேவர்தம் விதியொழித் தன்பால்
ஐயனே என்றுன் அருள்வழி யிருப்பேன்
நாட்டுத் தேவரும் நாடரும் பொருளே
நாத னேஉனைப் பிரிவுறா அருளைக்
காட்டித் தேவநின் கழலிணை காட்டிக்
காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய்
சேட்டைத் தேவர்தந் தேவர் பிரானே
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. . 402

அறுக்கி லேன்உடல் துணிபடத் தீப்புக்
கார்கி லேன்திரு வருள்வகை யறியேன்
பொறுக்கி லேன்உடல் போக்கிடங் காணேன்
போற்றி போற்றியென் போர்விடைப் பாகா
இறக்கி லேன்உனைப் பிரிந்தினி திருக்க
என்செய் கேன்இது செய்கஎன் றருளாய்
சிறைக்க ணேபுனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 403

மாய னேமறி கடல்விடம் உண்ட
வான வாமணி கண்டத்தெம் அமுதே
நாயி னேன்உனை நினையவும் மாட்டேன்
நமச்சி வாயஎன் றுன்னடி பணியாப்
பேய னாகிலும் பெருநெறி காட்டாய்
பிறைகு லாஞ்சடைப் பிஞ்ஞக னேயோ
சேய னாகிநின் றலறுவ தழகோ
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. 404

போது சேரயன் பொருகடற் கிடந்தோன்
புரந்த ராதிகள் நிற்கமற் றென்னைக்
கோது மாட்டிநின் குரைகழல் காட்டிக்
குறிக்கொள் கென்றுநின் தொண்டரிற் [கூட்டாய்
யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே
அடிய னேன்இடர்ப் படுவதும் இனிதோ
சீத வார்புனல் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. . 405

ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்
நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய்
காலன் ஆர்உயிர் கொண்டபூங் கழலாய்
கங்கை யாய்அங்கி தங்கிய கையாய்
மாலும் ஓலமிட் டலறும்அம் மலர்க்கே
மரக்க ணேனையும் வந்திடப் பணியாய்
சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. . 406

வளைக்கை யானொடு மலரவன் அறியா
வான வாமலை மாதொரு பாகா
களிப்பெ லாம்மிகக் கலங்கிடு கின்றேன்
கயிலை மாமலை மேவிய கடலே
அளித்து வந்தெனக் காவஎன் றருளி
அச்சந் தீர்த்தநின் அருட்பெருங் கடலில்
திளைத்துந் தேக்கியும் பருகியும் உருகேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.. 407

திருச்சிற்றம்பலம்