சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய எட்டாம் திருமுறை

திருவாசகம் – திருக்கோவையார்

76 பதிகங்கள் – 1058 பாடல்கள் 


29. அருட்பத்து


மகாமாயா சுத்தி
(திருப்பெருந்துறையில் அருளியது – எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)


சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிசூழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய் பங்கயத் தயனுமா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந்துறையில் நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என் றரு ளாயே. 458

நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக் கண்ணனே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட்டலறி உலகெலாந் தேடியுந் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருத்தமே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 459

எங்கள்நாயகனே என்னுயிர்த் தலைவா ஏலவார் குழலிமார் இருவர்
தங்கள் நாயகனே தக்கநற்காமன் தனதுடல் தழலெழ விழித்த
செங்கண்நாயகனே திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர்
அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றருளாயே. 460

கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக் கண்ணனும் நண்ணுதற்கரிய
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர்
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 461

துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை துணைமுலைக் கண்கள்தோய் சுவடு
பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு பொங்கொளி தங்குமார் பின்னே
செடிகொள்வான் பொழிலசூழ் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர்
அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 462

துப்பனே தூயாய் தூயவெண்ணீறு துதைந்தெழு துளங்கொளி வயிரத்
தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின் உறுசுவை துளிக்கும் ஆரமுதே
செப்பமா மறைசேர் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர்
அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 463

மெய்யனே விகிர்தா மேருவே வில்லா மேலவர் புரங்கள் மூன்றெரித்த
கையனே காலாற் காலனைத் காய்ந்த கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்
செய்யனே செல்வத் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர்
ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 464

முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ்
சித்தனே செல்வத் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர்
அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 465

மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி மறுமையோ டிம்மையுங் கெடுத்த
பொருளணே புனிதா பொங்குவா ளரவங் கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்
தெருளுநான் மறைசேர் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 466

திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர்
இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட் டென்னுடை யெம்பிரான் என்றென்
றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால் அலைகடல் அதனுளே நின்று
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண் போதராய் என்றளு ளாயே. 467

திருச்சிற்றம்பலம்