
திருமுறை அறிவோம். வாழ்வில் திருப்பத்தைக் காண்போம்.

திருமுறை அறிவோம். வாழ்வில் திருப்பத்தைக் காண்போம்.
கலியுகத்தில் நமக்கு ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களுக்கும், வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், பிறவி என்னும் மிகப்பெரிய பிணிக்கும், மருந்தாக அமைந்து நம்மைக் காத்து அருள்வது பன்னிரு திருமுறைகள் எனப்படும் சிவ ஆகமங்களாகும். மிகவும் பெருமைமிக்கது, அளப்பரியது, ஆற்றல்மிக்கது. வேத ஆகமங்கள் மற்றும் சைவ சித்தாந்தத்தின் பிழிந்த சாறாக, நமக்கு இன்பம் தரும் நமது தமிழ் மொழியில், அருளாளர்கள் வழியாக இறைவனால் நமக்கு அருளப்பட்டது, பன்னிரு திருமுறை என்னும் தமிழ் வேதம்.
நம்முடைய துன்பங்கள் அனைத்திற்க்கும் மூல காரணமாக விளங்குவது நம் அறியாமை. அந்த அறியாமையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் உதவுகின்றன. வினை வயப்பட்டுத் துன்புறும் நாம் திருந்தி உய்யும் பொருட்டு, இறைவன் அருளாளர்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக நமக்கு இந்த திருமுறைகளை அருளிச் செய்துள்ளான். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மந்திர ஆற்றல் உடையவை. திருமுறைகளை நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால், அதில் உள்ள மந்திர ஆற்றல், நம் உயிரில் கலந்து நமது அறியாமையைப் போக்கும். யாராலும் மாற்றியமைக்க முடியாத நம் விதியை, இறைவனின் கருணையினால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். விதியை மதியால் வெல்வது என்பது திருமுறைகளை ஓதுவித்து, இறைவன் அருள்பெற்று, நம் விதியை மாற்றுவதேயாகும்.
பன்னிரு திருமுறைகளால் நம் ஆன்மீக பூமியில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சில:
- பாண்டிய மன்னன் வெப்பு நோய் தீர்ந்து, கூன் நிமிர்ந்தது.
- வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்து, பின் தாளிட்டது.
- பாலை நிலம் நெய்தல் ஆனது.
- தேவார ஏடுகள் தீயில் கருகாமல் பச்சையாக இருந்தது,
- வைகை ஆற்று வெள்ளத்தில் எதிரே நீந்தியது.
- ஆண் பனை பெண் பனையாயிற்று.
- எலும்பு பெண்ணாகியது.
- விடத்தினால் இறந்த செட்டி உயிர் பெற்றார்.
- ஆற்றில் போட்டது குளத்தில் கிடைத்தது.
- சுண்ணாம்பு காளவாயில் 7 நாட்கள் உயிரோடு இருந்தது.
- மதயானையை வணங்கச் செய்தது.
- கல்லில் கட்டி கடலில் வீசியவர் தெப்பமாக மிதந்து கரை சேர்ந்தது.
- நரி குதிரையாகியது.
- முதலை விழுங்கிய பிள்ளை 3 ஆண்டுகள் கழித்து மீண்டது.
- பிறவி ஊமை பேசியது.
- சிவபெருமானே தம் கைப்பட எழுதியது நூலானது.
இன்னும் பல எண்ணற்ற அற்புதங்களை செய்துள்ளது பன்னிரு திருமுறை. திருமுறையே சைவநெறிக் கருவூலம், செந்தமிழ் வேதம்.
பன்னிரு திருமுறைகள் என்பவை சைவத்தின் தலைவனான சிவபெருமானைப் போற்றி பாடிய பன்னிரெண்டு நூல்களின் தொகுப்பாகும். முறை என்றால் நல்ல கருத்துக்களைக் கூறி நமது வாழ்வினை நெறிப்படுத்தக் கூடிய நூல் என்பதாகும். திரு என்பதை ‘தெய்வீகம் பொருந்திய’ எனக் கொள்ளலாம். எனவே திருமுறை என்பதற்கு தெய்வீக நூல் என்பது பொருள் ஆகும்.
பன்னிரு திருமுறைகளின் வரலாறு
இராசஇராச சோழன் என்னும் சோழப் பேரரசன் கோவில்களில் வாய்மொழியாகப் பாடப்பெற்ற தேவாரப்பாடல்களைக் கேட்டு இப்பாடல்களைத் தொகுக்க எண்ணினார். தேவாரப் பாடல்கள் இருக்கும் இடத்தை விநாயகரின் அருளுக்குப் பாத்திரமான நம்பியாண்டார் நம்பி என்பவர் மூலம் சிதம்பரம் கோவிலின் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்தார்.
தேவாரம் பாடிய மூவர் வந்தால் மட்டுமே அறையின் கதவினைத் திறக்க முடியும் என சிதம்பரம் கோவிலில் கூறினார்கள். காலஞ்சென்ற அம்மூவரையும் எவ்வாறு கொண்டு வருவது? என மன்னன் சிந்தித்தார். உடனே தேவார மூவரையும் சிலை வடிவில் அங்கு கொண்டு வந்து அறையினை திறக்கச் செய்தார். அங்கு ஓலைசுவடிகள் பல செல்லரித்து இருந்தன. மீதம் உள்ளவற்றை நம்பியாண்டார் நம்பி கிபி பதினோராம் நூற்றாண்டில் பதினோரு திருமுறைகளாகத் தொகுத்தார்.
பின் அநாபாயச் சோழ மன்னனின் வேண்டுகோளின்படி சேக்கிழார் 64 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைத் திருத்தொண்டர் புராணம் என்ற பெயரில் பாடல்களைப் பாடினார். திருதொண்டர் புராணம் நூலானது 12-வது திருமுறையாக பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சேர்க்கப்பட்டது.
பன்னிரு திருமுறைகள்
1-ம் திருமுறைகள்
2-ம் திருமுறைகள்
3-ம் திருமுறைகள்
திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட பாடல்கள் 1, 2, 3-ம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட பாடல்கள் திருக்கடைக்காப்பு என்று அழைக்கப்படுகிறது. சம்பந்தரின் பாடல்கள் தமிழ் இலக்கியத்தையும், இசையும் மிளரச் செய்கின்றன.
4–ம் திருமுறைகள்
5–ம் திருமுறைகள்
6-ம் திருமுறைகள்
திருநாவுக்கரசரால் பாடப்பட்ட பாடல்கள் 2, 3, 4-ம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. திருநாவுக்கரசரால் பாடப்பட்ட பாடல்கள் தேவாரம் என்று அழைக்கப்படுகிறது. அப்பரின் பாடல்கள் தொண்டின் மூலம் இறைவனை அடையலாம் என்பதை விளக்குகின்றன.
7-ம் திருமுறை
சுந்தரர் பாடிய பாடல்கள் 7-ம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சுந்தரரால் பாடப்பட்ட பாடல்கள் திருப்பாட்டு என்று அழைக்கப்படுகிறது. சுந்தரர் பாடிய பாடல்கள் சுந்தரர் தேவாரம் என்று அழைக்கப்படுகிறது.
8-ம் திருமுறை
மாணிக்க வாசகர் அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. தேன்ரசம் கொட்டும் இவரின் பாடல்கள் இறைவனைச் சரணடைதல் மற்றும் பக்தி பற்றி விவரிக்கிறது.
9-ம் திருமுறை
திருமாளிகைத்தேவர், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருசோத்தம நம்பி, சேதிராயர், சேந்தனார் ஆகிய ஒன்பது நபர்களால் பாடப்பட்ட பாடல்கள் ஒன்பதாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டது.
இத்திருமுறையில் உள்ள நூல்கள் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவை ஆகும். சேந்தனார் மட்டும் திருப்பல்லாண்டு, திருவிசைப்பா இரண்டையும் பாடியுள்ளார். ஏனையோர் திருவிசைபாவினை மட்டும் பாடியுள்ளனர்.
10-ம் திருமுறை
திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் பக்தியோடு யோகான முறைகளையும் எடுத்துக் கூறுகிறது.
11-ம் திருமுறை
திருஆலவாயுடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமான், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமாள் அடிகள், அதிராவடிகள், பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பி ஆகிய பதினோரு நபர்களால் பாடிய பாடல்கள் 11-ம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. 11-ம் திருமுறையில் உள்ள நூல்கள் பிரபந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
12-ம் திருமுறை
64 நாயன்மார்களின் வரலாற்றைப் பற்றிய சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் 12-ம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 18,326 பாடல்களைக் கொண்டது பன்னிரு திருமுறை.
முதல் திருமுறையின் முதல் பாடல் ‘தோடுடைய செவியன்’ எனத் தொடங்குகிறது. இப்பாடலின் முதல் எழுத்தான தோ என்பது த் + ஓ எனப் பிரிக்கப்படுகிறது. இதில் ‘ஓ’ என்பது பிரவண மந்திரமான முதல் எழுத்தைக் குறிக்கிறது.
பன்னிரெண்டாவது திருமுறையான திருத்தொண்டர் புராணத்தின் முதல் பாடல் ‘உலகெல்லாம்’ என்று தொடங்குகிறது. இதில் கடைசி எழுத்து ‘ம்’ என்பது பிரவண மந்திரமான கடைசி எழுத்தைக் குறிக்கிறது. எனவே இப்பாடல்கள் வேதங்களின் விளக்கங்கள் எனப் போற்றப்படுகின்றன.
பன்னிரு திருமுறைகள் முதல் ஒன்பது திருமுறைகள் இறைவனை வாழ்த்திக் கூறுவதால் இவை தோத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
10-ம் திருமுறை வாழ்க்கைக்கான வழிகாட்டியாக உள்ளதால் சாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
11-ம் திருமுறை பாடல்கள் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
12-ம் திருமுறை பாடல்கள் 64-ம் நாயன்மார்களின் வாழ்க்கையை விளக்குவதால் இது வரலாறு என்று அழைக்கப்படுகிறது.
பிறப்பு இறப்பு, ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான் ஒருவரே முழுமுதற்கடவுள். பன்னிரு திருமுறை சிவபெருமானின் மந்திர வடிவமாகும். திருமுறை சிவாலயங்களில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பெற்று சிவபெருமானாகவே வழிபடப் பெற்று வருவது. பன்னிரு திருமுறைகளை ஓதினாலும், ஓதுவதைக் கேட்டாலும், அத்தனை தீய சக்திகளும் அவ்விடத்திலிருந்து விலகி நல்ல மந்திர சக்தியால் அந்த இடம் சூழ்ந்து நல்லதே நடக்கும். ஆகையால் திருமுறை அறிவோம். தினமும் திருமுறை ஓதுவோம்.
திருச்சிற்றம்பலம்
நாமும் வாழ்விற்குத் தேவையான வளங்களை அள்ளித்தரும் பன்னிரு திருமுறைகளால் இறைவனை வணங்கி வாழ்வின் நன்னிலை அடைவோம். THANKS TO – வ.முனீஸ்வரன் inidhu.com , saivasamayam.in