சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.033. நமக்கடிகளாகிய – அடிகள்


திருச்சிற்றம்பலம்


பண் – கொல்லி

330
பாறுதாங்கிய காடரோபடு தலையரோமலைப் பாவையோர்
கூறுதாங்கிய குழகரோகுழைக் காதரோகுறுங் கோட்டிள
ஏறுதாங்கிய கொடியரோசுடு பொடியரோஇலங் கும்பிறை
ஆறுதாங்கிய சடையரோநமக் கடிகளாகிய அடிகளே. 7.33.1

331
இட்டிதாகவந் துரைமினோநுமக் கிசையுமாநினைந் தேத்துவீர்
கட்டிவாழ்வது நாகமோசடை மேலும்நாறு கரந்தையோ
பட்டியேறுகந் தேறரோபடு வெண்டலைப்பலி கொண்டுவந்
தட்டியாளவுங் கிற்பரோநமக் கடிகளாகிய அடிகளே. 7.33.2

332
ஒன்றினீர்கள்வந் துரைமினோநுமக் கிசையுமாநினைந் தேத்துவீர்
குன்றிபோல்வதோ ருருவரோகுறிப் பாகிநீறுகொண் டணிவரோ
இன்றியேயிலர் ஆவரோஅன்றி உடையராயிலர் ஆவரோ
அன்றியேமிக அறவரோநமக் கடிகளாகிய அடிகளே. 7.33.3

333
தேனையாடுமுக் கண்ணரோமிகச் செய்யரோவெள்ளை நீற்றரோ
பானெய்ஆடலும் பயில்வரோதமைப் பற்றினார்கட்கு நல்லரோ
மானைமேவிய கண்ணினாள்மலை மங்கைநங்கையை அஞ்சவோர்
ஆனையீருரி போர்ப்பரோநமக் கடிகளாகிய அடிகளே. 7.33.4

334
கோணல்மாமதி சூடரோகொடு கொட்டிகாலர் கழலரோ
வீணைதானவர் கருவியோ விடையேறுவேத முதல்வரோ
நாணதாகவோர் நாகங்கொண்டரைக் கார்ப்பரோநல மார்தர
ஆணையாகநம் மடிகளோநமக் கடிகளாகிய அடிகளே. 7.33.5

335
வந்துசொல்லுமின் மூடனேனுக்கு வல்லவாநினைந் தேத்துவீர்
வந்தசாயினை அறிவரோதம்மை வாழ்த்தினார்கட்கு நல்லரோ
புந்தியாலுரை கொள்வரோஅன்றிப் பொய்யில்மெய்யுரைத் தாள்வரோ
அன்றியேமிக அறவரோநமக் கடிகளாகிய அடிகளே. 7.33.6

336
மெய்யென்சொல்லுமின் நமரங்காளுமக் கிசையுமாநினைந் தேத்துவீர்
கையிற்சூலம துடையரோகரி காடரோகறைக் கண்டரோ
வெய்யபாம்பரை ஆர்ப்பரோவிடை ஏறரோகடை தோறுஞ்சென்
றையங்கொள்ளுமவ் வடிகளோநமக் கடிகளாகிய அடிகளே. 7.33.7

337
நீடுவாழ்பதி உடையரோஅயன் நெடியமாலுக்கு நெடியரோ
பாடுவாரையும் உடையரோதமைப் பற்றினார்கட்கு நல்லரோ
காடுதானரங் காகவேகைகள் எட்டினோடில யம்பட
ஆடுவாரெனப் படுவரோநமக் கடிகளாகிய அடிகளே. 7.33.8

338 நமணநந்தியுங் கருமவீரனுந் தருமசேனனு மென்றிவர்
குமணமாமலைக் குன்றுபோனின்று தங்கள்கூறையொன் றின்றியே
ஞமணஞாஞண ஞாணஞோணமென் றோதியாரையு நாணிலா
அமணராற்பழிப் புடையரோநமக் கடிகளாகிய அடிகளே. 7.33.9

339 படிசெய்நீர்மையிற் பத்தர்காள்பணிந் தேத்தினேன்பணி யீரருள்
வடிவிலான்றிரு நாவலூரன் வனப்பகையப்பன் வன்றொண்டன்
செடியனாகிலுந் தீயனாகிலுந் தம்மையேமனஞ் சிந்திக்கும்
அடியனூரனை ஆள்வரோநமக் கடிகளாகிய அடிகளே. 7.33.10

திருச்சிற்றம்பலம்