சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.071 திருமறைக்காடு


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மறைக்காட்டீசுவரர்,
தேவியார் – யாழைப்பழித்தநாயகி.


பண் – காந்தாரம்

719
யாழைப்பழித் தன்னமொழி மங்கையொரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான்இடம் பேணில்
தாழைப்பொழி லூடேசென்று பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங் குண்ணும்மறைக் காடே. 7.71.1

720
சிகரத்திடை இளவெண்பிறை வைத்தான்இடந் தெரியில்
முகரத்திடை முத்தின்னொளி பவளத்திரள் ஓதத்
தகரத்திடை தாழைத்திரள் ஞாழற்றிரள் நீழல்
மகரத்தொடு சுறவங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே. 7.71.2

721
அங்கங்களும் மறைநான்குடன் விரித்தானிடம் அறிந்தோம்
தெங்கங்களும் நெடும்பெண்ணையும் பழம்வீழ்மணற் படப்பைச்
சங்கங்களும் இலங்கிப்பியும் வலம்புரிகளும் இடறி
வங்கங்களும் உயர்கூம்பொடு வணங்கும்மறைக் காடே. 7.71.3

722
நரைவிரவிய மயிர்தன்னொடு பஞ்சவடி மார்பன்
உரைவிரவிய உத்தமனிடம் உணரல்லுறு மனமே
குரைவிரவிய குலசேகரக் கொண்டற்றலை விண்ட
வரைபுரைவன திரைபொருதிழிந் தெற்றும்மறைக் காடே. 7.71.4

723
சங்கைப்பட நினையாதெழு நெஞ்சேதொழு தேத்தக்
கங்கைச்சடை முடியுடையவர்க் கிடமாவது பரவை
அங்கைக்கடல் அருமாமணி உந்திக்கரைக் கேற்ற
வங்கத்தொடு சுறவங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே. 7.71.5

724
அடல்விடையினன் மழுவாளினன் அலராலணி கொன்றைப்
படருஞ்சடை முடியுடையவர்க் கிடமாவது பரவைக்
கடலிடையிடை கழியருகினிற் கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு மணிநீர்மறைக் காடே. 7.71.6

725
முளைவளரிள மதியுடையவன் முன்செய்தவல் வினைகள்
களைகளைந்தெனை ஆளல்லுறு கண்டன்னிடஞ் செந்நெல்
வளைவிளைவயற் கயல்பாய்தரு குணவார்மணற் கடல்வாய்
வளைவளையொடு சலஞ்சலங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே. 7.71.7

726
நலம்பெரியன சுரும்பார்ந்தன நங்கோனிடம் அறிந்தோம்
கலம்பெரியன சாருங்கடற் கரைபொருதிழி கங்கைச்
சலம்புரிசடை முடியுடையவர்க் கிடமாவது பரவை
வலம்புரியொடு சலஞ்சலங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே. 7.71.8

727
குண்டாடியுஞ் சமணாடியுங் குற்றுடுக்கையர் தாமுங்
கண்டார்கண்ட காரணம்மவை கருதாதுகை தொழுமின்
எண்டோ ளினன் முக்கண்ணினன் ஏழிசையினன் அறுகால்
வண்டாடுதண் பொழில்சூழ்ந்தெழு மணிநீர்மறைக் காடே. 7.71.9

728
பாரூர்பல புடைசூழ்வள வயல்நாவலர் வேந்தன்
வாரூர்வன முலையாள்உமை பங்கன்மறைக் காட்டை
ஆரூரன தமிழ்மாலைகள் பாடும்மடித் தொண்டர்
நீரூர்தரு நிலனோடுயர் புகழாகுவர் தாமே. 7.71.10

திருச்சிற்றம்பலம்