சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.056 திருவிடைமருதூர்


 

பண் – காந்தாரம்
601

பொங்குநூன் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை
தங்குசெஞ் சடையினீர் சாமவேதம் ஓதினீர்
எங்குமெழிலார் மறையோர்கள் முறையாலேத்த இடைமருதில்
மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.  01

602

நீரார்ந்த செஞ்சடையீர் நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர்
போரார்ந்த வெண்மழுவொன் றுடையீர் பூதம்பாடலீர்
ஏரார்ந்த மேகலையாள் பாகங்கொண்டீர் இடைமருதில்
சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.  02

603

அழல்மல்கும் அங்கையி லேந்திப்பூதம் அவைபாடச்
சுழல்மல்கும் ஆடலீர் சுடுகாடல்லாற் கருதாதீர்
எழில்மல்கும் நான்மறையோர் முறையாலேத்த இடைமருதில்
பொழில்மல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.  03

604

பொல்லாப் படுதலையொன் றேந்திப்புறங்காட் டாடலீர்
வில்லாற் புரமூன்றும் எரித்தீர்விடையார் கொடியினீர்
எல்லாக் கணங்களும் முறையாலேத்த இடைமருதில்
செல்வாய கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.  04

605

வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர் சீராலேத்த இடைமருதில்
பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே.  05

606

சலமல்கு செஞ்சடையீர் சாந்தநீறு பூசினீர்
வலமல்கு வெண்மழுவொன் றேந்திமயானத் தாடலீர்
இலமல்கு நான்மறையோ ரினிதாயேத்த இடைமருதில்
புலமல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.  06

607

புனமல்கு கொன்றையீர் புலியின்அதளீர் பொலிவார்ந்த
சினமல்கு மால்விடையீர் செய்யீர்கரிய கண்டத்தீர்
இனமல்கு நான்மறையோ ரேத்துஞ்சீர்கொள் இடைமருதில்
கனமல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.  07

608

சிலையுய்த்த வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திறலரக்கன்
தலைபத்துந் திண்டோ ளும் நெரித்தீர் தையல்பாகத்தீர்
இலைமொய்த்த தண்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த இடைமருதில்
நலமொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே.  08

609

மறைமல்கு நான்முகனும் மாலும்அறியா வண்ணத்தீர்
கறைமல்கு கண்டத்தீர் கபாலமேந்து கையினீர்
அறைமல்கு வண்டினங்கள் ஆலுஞ்சோலை இடைமருதில்
நிறைமல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.  09

610

சின்போர்வைச் சாக்கியரும் மாசுசேருஞ் சமணருந்
துன்பாய கட்டுரைகள் சொல்லியல்லல் தூற்றவே
இன்பாய அந்தணர்கள் ஏத்தும்ஏர்கொள் இடைமருதில்
அன்பாய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.  10

611

கல்லின் மணிமாடக் கழுமலத்தார் காவலவன்
நல்ல அருமறையான் நற்றமிழ்ஞான சம்பந்தன்
எல்லி இடைமருதில் ஏத்துபாட லிவைபத்துஞ்
சொல்லு வார்க்குங் கேட்பார்க்குந் துயரமில்லையே.  11

திருச்சிற்றம்பலம்