சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.074 திருப்பிரமபுரம் – திருக்கோமூத்திரி


பண் – காந்தாரம்

799

பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர் குறைவிலாப் புகலி பூமேல்
மாமகளூர் வெங்குருநல் தோணிபுரம் பூந்தராய் வாய்ந்த இஞ்சிச்
சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை புகழ்ச்சண்பை காழி கொச்சை
காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர் கழுமலம்நாங் கருது மூரே.  01

800

கருத்துடைய மறையவர்சேர் கழுமலம்மெய்த் தோணிபுரம் கனக மாட
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா யுலகாருங் கொச்சை காழி
திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர் செங்கமலத் தயனூர் தெய்வத்
தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை முடியண்ணல் தங்கு மூரே.  02

801

ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை யொளிமருவு காழி கொச்சை
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த் தோணிபுரங் கற்றோ ரேத்துஞ்
சீர்மருவு பூந்தராய் சிரபுரம்மெய்ப் புறவம்அய னூர்பூங் கற்பத்
தார்மருவும் இந்திரனூர் புகலிவெங் குருக்கங்கை தரித்தோ னூரே.  03

802

தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த் தோணிபுரந் தரியா ரிஞ்சி
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந் தராய்புகலி யிமையோர் கோனூர்
தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி சண்பைசெழு மறைக ளெல்லாம்
விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ னூருலகில் விளங்கு மூரே.  04

803

விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை வேணுபுரம் மேக மேய்க்கும்
இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி யெழிற்புகலி புறவம் ஏரார்
வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச் சிரபுரம்வன் னஞ்ச முண்டு
களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா மன்னுடலங் காய்ந்தோ னூரே.  05

804

காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர் கழுமலமாத் தோணிபுரஞ் சீர்
ஏய்ந்தவெங் குருபுகலி இந்திரனூர் இருங்கமலத் தயனூர் இன்பம்
வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந் தராய்கொச்சை காழி சண்பை
சேந்தனைமுன் பயந்துலகில் தேவர்கள்தம் பகைகெடுத்தோன் திகழு மூரே.  06

805

திகழ்மாட மலிசண்பை பூந்தராய் பிரமனூர் காழி தேசார்
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம் வயங்கொச்சை புறவம் விண்ணோர்
புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங் குருவெம்போர் மகிடற் செற்று
நிகழ்நீலி நின்மலன்றன் அடியிணைகள் பணிந்துலகில் நின்ற வூரே.  07

806

நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி புரநிகழும் வேணு மன்றில்
ஒன்றுகழு மலங்கொச்சை உயர்காழி சண்பைவளர் புறவ மோடி
சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந் தராய்புகலி தேவர் கோனூர்
வென்றிமலி பிரமபுரம் பூதங்கள் தாங்காக்க மிக்க வூரே.  08

807

மிக்ககம லத்தயனூர் விளங்குபுற வஞ்சண்பை காழி கொச்சை
தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் சேரூர்
மைக்கொள்பொழில் வேணுபுரம் மதிற்புகலி வெங்குருவல் அரக்கன் திண்டோ ள்
ஒக்கஇரு பதுமுடிகள் ஒருபதுமீ டழித்துகந்த எம்மா னூரே.  09

808

எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர் கழுமலநற் புகலி யென்றும்
பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந் தரனூர்நற் றோணிபுரம் போர்க்
கைம்மாவை யுரிசெய்தோன் காழியய னூர்தராய் சண்பை காரின்
மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய் விளங்கியஎம் இறைவ னூரே.  10

809

இறைவனமர் சண்பையெழிற் புறவம்அய னூர்இமையோர்க் கதிபன் சேரூர்
குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி புரங்குணமார் பூந்தராய் நீர்ச்
சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர் கொச்சைகழு மலந்தே சின்றிப்
பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள் பரிசறியா அம்மா னூரே.  11

810

அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங் குருக்கொச்சை புறவ மஞ்சீர்
மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி தோணிபுரந் தேவர் கோனூர்
அம்மான்மன் னுயர்சண்பை தராய்அயனூர் வழிமுடக்கு மாவின் பாச்சல்
தம்மானொன் றியஞான சம்பந்தன் தமிழ்கற்போர் தக்கோர் தாமே.  12

திருச்சிற்றம்பலம்