சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.060 திருப்பாசூர்


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பாசூர்நாதர், தேவியார் – பசுபதிநாயகியம்மை.


பண் – காந்தாரம்

644

சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
மைந்தர் மணாளர் என்ன மகிழ்வா ரூர்போலும்
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.  01

645

பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மானென்
றாருந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்
ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர்போலும்
பாரின் மிசையார் பாட லோவாப் பாசூரே.  02

646

கையாற் றொழுது தலைசாய்த் துள்ளங் கசிவார்கள்
மெய்யார் குறையுந் துயருந் தீர்க்கும் விமலனார்
நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவும் ஊர்போலும்
பைவாய் நாகங் கோட லீனும் பாசூரே.  03

647

பொங்கா டரவும் புனலுஞ் சடைமேல் பொலிவெய்தக்
கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளங் குளிர்வித்தார்
தங்கா தலியுந் தாமும் வாழும் ஊர்போலும்
பைங்கான் முல்லை பல்லரும் பீனும் பாசூரே.  04

648

ஆடற் புரியும் ஐவா யரவொன் றரைச்சாத்தும்
சேடச் செல்வர் சிந்தையு ளென்றும் பிரியாதார்
வாடற் றலையிற் பலிதேர் கையார் ஊர்போலும்
பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலைப் பாசூரே.  05

649

கானின் றதிரக் கனல்வாய் நாகம் கச்சாகத்
தோலொன் றுடையார் விடையார் தம்மைத் தொழுவார்கள்
மால்கொண் டோ ட மையல் தீர்ப்பார் ஊர்போலும்
பால்வெண் மதிதோய் மாடஞ்சூழ்ந்த பாசூரே.  06

650

கண்ணின் அயலே கண்ணொன் றுடையார் கழலுன்னி
எண்ணுந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்
உண்ணின் றுருக உவகை தருவார் ஊர்போலும்
பண்ணின் மொழியார் பாட லோவாப் பாசூரே.  07

651

தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் கோமானைக்
கூச அடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவார் ஊர்போலும்
பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே.  08

652

நகுவாய் மலர்மேல் அயனும் நாகத் தணையானும்
புகுவா யறியார் புறம்நின் றோரார் போற்றோவார்
செகுவாய் உகுபற் றலைசேர் கையார் ஊர்போலும்
பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே.  09

653

தூய வெயில்நின் றுழல்வார் துவர்தோய் ஆடையர்
நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயமில்லார்
காவல் வேவக் கணையொன் றெய்தார் ஊர்போலும்
பாவைக் குரவம் பயில்பூஞ் சோலைப் பாசூரே.  10

654

ஞானம் உணர்வான் காழி ஞான சம்பந்தன்
தேனும் வண்டும் இன்னிசை பாடுந் திருப்பாசூர்க்
கானம் முறைவார் கழல்சேர் பாடல் இவைவல்லார்
ஊனம் இலராய் உம்பர் வானத் துறைவாரே.  11

திருச்சிற்றம்பலம்