சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.067 திருப்பெரும்புலியூர்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வியாக்கிரபுரீசுவரர், தேவியார் – சவுந்தராம்பிகையம்மை.


பண் – காந்தாரம்
720

மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்
விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்
கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்
பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே.  01

720

துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண் டோ ள்கள்
மின்னு சுடர்க்கொடி போலும் மேனியி னாளொரு *கங்கைக்
கன்னி களின்புனை யோடு கலைமதி மாலை கலந்த
பின்னு சடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.  02

722

கள்ள மதித்த கபாலங் கைதனி லேமிக ஏந்தித்
துள்ள மிதித்துநின் றாடுந் தொழிலர் எழில்மிகு செல்வர்
வெள்ள நகுதலை மாலை விரிசடை மேல்மிளிர் கின்ற
பிள்ளை மதிப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.  03

723

ஆட லிலையம் உடையார் அருமறை தாங்கியா றங்கம்
பாட லிலையம் உடையார் பன்மை யொருமைசெய் தஞ்சும்
ஊட லிலையம் உடையார் யோகெனும் பேரொளி தாங்கி
பீட லிலையம் உடையார் பெரும்புலி யூர்பிரி யாரே.  04

724

தோடுடை யார்குழைக் காதிற் சுடுபொடி யாரன லாடக்
காடுடை யாரெரி வீசுங் கையுடை யார்கடல் சூழ்ந்த
நாடுடை யார்பொரு ளின்ப நல்லவை நாளு நயந்த
பீடுடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.  05

725

கற்ற துறப்பணி செய்து காண்டுமென் பாரவர் தங்கண்
முற்றி தறிதுமென் பார்கள் முதலியர் வேதபு ராணர்
மற்றி தறிதுமென் பார்கள் மனத்திடை யார்பணி செய்யப்
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலி யூர்பிரி யாரே.  06

726

மறையுடை யாரொலி பாடல் மாமலர்ச் சேவடி சேர்வார்
குறையுடை யார்குறை தீர்ப்பார் குழகர் அழகர் நஞ்செல்வர்
கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார்
பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலி யூர்பிரி யாரே.  07

727

உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடெளி தாகித்
துறவியுங் கூட்டமுங் காட்டித் துன்பமும் இன்பமுந் தோற்றி
மறவியென் சிந்தனை மாற்றி வாழவல் லார்தமக் கென்றும்
பிறவி யறுக்கும் பிரானார் பெரும்புலி யூர்பிரி யாரே.  08

728

சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை சேரும்
நீருடை யார்பொடிப் பூசு நினைப்புடை யார்விரி கொன்றைத்
தாருடை யார்விடை யூர்வார் தலைவரைந் நூற்றுப்பத் தாய
பேருடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.  09

729

உரிமை யுடையடி யார்கள் உள்ளுற வுள்கவல் லார்கட்
கருமை யுடையன காட்டி அருள்செயும் ஆதி முதல்வர்
கருமை யுடைநெடு மாலுங் கடிமல ரண்ணலுங் காணாப்
பெருமை யுடைப் பெருமானார் பெரும்புலி யூர்பிரி யாரே.  10

730

பிறைவள ரும்முடிச் சென்னிப் பெரும்புலி யூர்ப்பெரு மானை
நறைவள ரும்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன்
மறைவள ருந்தமிழ் மாலை வல்லவர் தந்துயர் நீங்கி
நிறைவளர் நெஞ்சின ராகி நீடுல கத்திருப் பாரே.  11

திருச்சிற்றம்பலம்