சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.25 திருப்புகலி

பண்இந்தளம்

262

உகலி யாழ்கட லோங்கு பாருளீர்
அகலி யாவினை யல்லல் போயறும்
இகலி யார்புர மெய்த வன்னுறை
புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே.-01

263

பண்ணி யாள்வதோ ரேற்றர் பால்மதிக்
கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப்
புண்ணி யன்னுறை யும்பு கலியை
நண்ணு மின்னல மான வேண்டிலே.-02

264

வீசு மின்புரை காதன் மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன்
பூசு நீற்றினன் பூம்பு கலியைப்
பேசு மின்பெரி தின்ப மாகவே.-03

265

கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன்
படிகொள் பாரிடம் பேசும் பான்மையன்
பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள்
அடிகளை யடைந் தன்பு செய்யுமே.-04

266

பாதத் தாரொலி பல்சி லம்பினன்
ஓதத் தார்விட முண்ட வன்படைப்
பூதத் தான்புக லிந்ந கர்தொழ
ஏதத் தார்க்கிட மில்லை யென்பரே.-05

267

மறையி னான்ஒலி மல்கு வீணையன்
நிறையி னார்நிமிர் புன்ச டையனெம்
பொறையி னானுறை யும்பு கலியை
நிறையி னாற்றொழ நேச மாகுமே.-06

268

கரவி டைமனத் தாரைக் காண்கிலான்
இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை
பொருவி டைஉயர்த் தான்பு கலியைப்
பரவி டப்பயில் பாவம் பாறுமே.-07

269

அருப்பி னார்முலை மங்கை பங்கினன்
விருப்பி னான்அரக் கன்னு ரஞ்செகும்
பொருப்பி னான்பொழி லார்பு கலியூர்
இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே.-08

270

மாலும் நான்முகன் றானும் வார்கழற்
சீல மும்முடி தேட நீண்டெரி
போலு மேனியன் பூம்பு கலியுள்
பால தாடிய பண்ப னல்லனே.-09

271

நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல்
ஒன்ற தாகவை யாவு ணர்வினுள்
நின்ற வன்னிக ழும்பு கலியைச்
சென்று கைதொழச் செல்வ மாகுமே.-10

272

புல்ல மேறிதன் பூம்பு கலியை
நல்ல ஞானசம் பந்தன் நாவினாற்
சொல்லும் மாலையீ ரைந்தும் வல்லவர்க்
கில்லை யாம்வினை இருநி லத்துளே.-11

திருச்சிற்றம்பலம்