சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்
2.087 திருநறையூர்
பண் – பியந்தைக்காந்தாரம்
941
நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி யரியான்மு னாய வொளியான்
நீரியல் காலுமாகி நிறைவானு மாகி யுறுதீயு மாய நிமலன்
ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த நலகண்டு பண்டு சுடலை
நாரியோர் பாகமாக நடமாட வல்ல நறையூரின் நம்ப னவனே. 01
942
இடமயி லன்னசாயல் மடமங்கை தன்கை யெதிர்நாணி பூண வரையிற்
கடும்அயி லம்புகோத்து எயில்செற் றுகந்து அமரர்க் களித்த தலைவன்
மடமயில் ஊர்திதாதை எனநின்று தொண்டர் மனம்நின்ற மைந்தன் மருவும்
நடமயி லாலநீடு குயில்கூவு சோலை நறையூரின் நம்ப னவனே. 02
943
சூடக முன்கைமங்கை யொருபாக மாக அருள்கார ணங்கள் வருவான்
ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு படுபிச்ச னென்று பரவத்
தோடக மாயோர்காதும் ஒருகா திலங்கு குழைதாழ வேழ வுரியன்
நாடக மாகவாடி மடவார்கள் பாடும் நறையூரின் நம்ப னவனே. 03
944
சாயல்நன் மாதோர்பாகன் விதியாய சோதி கதியாக நின்ற கடவுள்
ஆயக மென்னுள்வந்த அருளாய செல்வன் இருளாய கண்டன் அவனித்
தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு மலையின்கண் வந்து தொழுவார்
நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரின் நம்ப னவனே. 04
945
நெதிபடு மெய்யெம்ஐயன் நிறைசோலை சுற்றி நிகழம் பலத்தின் நடுவே
அதிர்பட ஆடவல்ல அமரர்க் கொருத்தன் எமர்சுற்ற மாய இறைவன்
மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து விடையேறி இல்பலி கொள்வான்
நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும் நறையூரின் நம்ப னவனே. 05
946
கணிகையோர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை மலர்துன்று செஞ்சடை யினான்
பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு பலவாகி நின்ற பரமன்
அணுகிய வேதவோசை யகலங்க மாறின் பொருளான ஆதி யருளான்
நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து நறையூரின் நம்ப னவனே. 06
947
ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க மவையார ஆட லரவம்
மிளிர்தரு கையிலங்க அனலேந்தி யாடும் விகிர்தன் விடங்கொள் மிடறன்
துளிதரு சோலையாலை தொழில்மேவ வேதம் எழிலார வென்றி யருளும்
நளிர்மதி சேருமாடம் மடவார்க ளாரும் நறையூரின் நம்ப னவனே. 07
948
அடலெரு தேறுகந்த அதிருங் கழற்கள் எதிருஞ் சிலம்பொ டிசையக்
கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன் முனிவுற் றிலங்கை யரையன்
உடலொடு தோளனைத்து முடிபத் திறுத்தும் இசைகேட் டிரங்கி யொருவாள்
நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல நறையூரின் நம்ப னவனே. 08
949
குலமலர் மேவினானும் மிகுமாய னாலும் எதிர்கூடி நேடி நினைவுற்
றிலபல எய்தொணாமை எரியா யுயர்ந்த பெரியா னிலங்கு சடையன்
சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச வருமைத் திகழ்ந்த பொழிலின்
நலமலர் சிந்தவாச மணநாறு வீதி நறையூரின் நம்ப னவனே. 09
950
துவருறு கின்றவாடை யுடல்போர்த் துழன்ற வவர்தாமு மல்ல சமணுங்
கவருறு சிந்தையாளர் உரைநீத் துகந்த பெருமான் பிறங்கு சடையன்
தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண முறைமாதர் பாடி மருவும்
நவமணி துன்றுகோயில் ஒளிபொன்செய் மாட நறையூரின் நம்ப னவனே. 10
951
கானலு லாவியோதம் எதிர்மல்கு காழி மிகுபந்தன் முந்தி யுணர
ஞானமு லாவுசிந்தை யடிவைத் துகந்த நறையூரின் நம்ப னவனை
ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த தமிழ்மாலை பத்தும் நினைவார்
வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று வழிபாடு செய்யும் மிகவே. 11
திருச்சிற்றம்பலம்