சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்
2.106 திருவலஞ்சுழி
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சித்தீசநாதர், தேவியார் – பெரியநாயகியம்மை.
பண் – நட்டராகம்
1147
என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே. 01
1148
விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை விரிகடல் வருநஞ்சம்
உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய இறைவனை உலகத்தில்
வண்டு வாழ்குழன் மங்கையோர் பங்கனை வலஞ்சுழி யிடமாகக்
கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ டினிதிருந் தமையாலே. 02
1149
திருந்த லார்புரந் தீயெழச் செறுவன விறலின்கண் அடியாரைப்
பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தமாம் பிணிநோய்க்கு
மருந்து மாவன மந்திர மாவன வலஞ்சுழி யிடமாக
இருந்த நாயகன் இமையவ ரேத்திய இணையடித் தலந்தானே. 03
1150
கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் அறத்திற முனிவர்க்கன்
றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந் தினிதருள் பெருமானார்
மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி யிடமகிழ்ந் தருங்கானத்
தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய அற்புதம் அறியோமே. 04
1151
மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலாம் எரியுரு வொருபாகம்
பெண்ண ராணெனத் தெரிவரு வடிவினர் பெருங்கடற் பவளம்போல்
வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம்புக்க
எண்ண ராகிலும் எனைப்பல இயம்புவர் இணையடி தொழுவாரே. 05
1152
ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர் மேனியர் மடமாதர்
இருவ ராதரிப் பார்பல பூதமும் பேய்களும் அடையாளம்
அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித் தகந்தொறும் பலிக்கென்று
வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே வரிவளை கவர்ந்தாரே. 06
1153
குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங் குலவிய நெய்த்தானம்
என்றிவ் வூர்களி லோமென்றும் இயம்புவர் இமையவர் பணிகேட்பார்
அன்றி யூர்தமக் குள்ளன அறிகிலோம் வலஞ்சுழி யரனார்பால்
சென்ற வூர்தனில் தலைப்பட லாமென்று சேயிழை தளர்வாமே. 07
1154
குயிலின் நேர்மொழிக் கொடியிடை வெருவுறக் குலவரைப் பரப்பாய
கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி தோளிரு பதுமூன்றி
மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன் வலஞ்சுழி யெம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே. 08
1155
அழல தோம்பிய அலர்மிசை யண்ணலும் அரவணைத் துயின்றானுங்
கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர் மாண்பமர் தடக்கையில்
மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி வலங்கொடு பாதத்தால்
சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு துன்பங்கள் களைவாரே. 09
1156
அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர் தவம்புரிந் தவஞ்செய்வார்
நெறிய லாதன கூறுவர் மற்றவை தேறன்மின் மாறாநீர்
மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானைப்
பிறிவி லாதவர் பெறுகதி பேசிடில் அளவறுப் பொண்ணாதே. 10
1157
மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயற்காழி
நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய் நவிற்றிய தமிழ்மாலை
ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக் கேட்டுகந் தவர்தம்மை
வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம்வந் தடையாவே. 11
திருச்சிற்றம்பலம்