சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.51 திருச்சோபுரம்

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சோபுரநாதர், தேவியார் – சோபுரநாயகியம்மை

பண் – பழந்தக்கராகம்

548

வெங்கண்ஆனை யீருரிவை போர்த்து விளங்குமொழி
மங்கைபாகம் வைத்துகந்த மாண்பது வென்னைகொலாங்
கங்கையோடு திங்கள்சூடிக் கடிகம ழுங்கொன்றைத்
தொங்கலானே தூயநீற்றாய் சோபுர மேயவனே.          1.51.1

549

விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவி ரிந்திலங்கு
சடையொடுங்கத் தண்புனலைத் தாங்கிய தென்னைகொலாங்
கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தன லுள்ளழுந்தத்
தொடைநெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுர மேயவனே.                                        1.51.2

550

தீயராய வல்லரக்கர் செந்தழ லுள்ளழுந்தச்
சாயவெய்து வானவரைத் தாங்கிய தென்னைகாலாம்
பாயும்வெள்ளை ஏற்றையேறிப் பாய்புலித் தோலுடுத்த
தூயவெள்ளை நீற்றினானே சோபுர மேயவனே.          1.513

551

பல்லிலோடு கையிலேந்திப் பல்கடை யும்பலிதேர்ந்
தல்லல்வாழ்க்கை மேலதான ஆதர வென்னைகொலாம்
வில்லைவென்ற நுண்புருவ வேல்நெடுங் கண்ணியொடுந்
தொல்லையூழி யாகிநின்றாய் சோபுர மேயவனே.                                        1.51.4

552

நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடை மேல்மதியம்
ஏற்றமாக வைத்துகந்த காரண மென்னைகொலாம்
ஊற்றமிக்க காலன்றன்னை ஒல்க வுதைத்தருளித்
தோற்றமீறு மாகிநின்றாய் சோபுர மேயவனே.          1.51.5

553

கொன்னவின்ற மூவிலைவேல் கூர்மழு வாட்படையன்
பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற் பென்னைகொலாம்
அன்னமன்ன மென்னடையாள் பாக மமர்ந்தரைசேர்
துன்னவண்ண ஆடையினாய் சோபுர மேயவனே.          1.51.6

554

குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடி யார்பணிவார்
கற்றல்கேள்வி ஞானமான காரண மென்னைகொலாம்
வற்றலாமை வாளரவம் பூண்டயன் வெண்டலையில்
துற்றலான கொள்கையானே சோபுர மேயவனே.          1.51.7

555

விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டு விறலரக்கர்
குலங்கள்வாழும் ஊரெரித்த கொள்கையி தென்னைகொலாம்
இலங்கைமன்னு வாளவுணர் கோனை யெழில்விரலால்
துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுர மேயவனே.          1.51.8

556

விடங்கொள்நாக மால்வரையைச் சுற்றி விரிதிரைநீர்
கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரண மென்னைகொலாம்
இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர் மேலயனுந்
தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுர மேயவனே.          1.51.9

557

புத்தரோடு புன்சமணர் பொய்யுரை யேரைத்துப்
பித்தராகக் கண்டுகந்த பெற்றிமை யென்னைகொலாம்
மத்தயானை யீருரிவை போர்த்து வளர்சடைமேல்
துத்திநாகஞ் சூடினானே சோபுர மேயவனே.                                       1.51.10

558 சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுர மேயவனைச்
சீலமிக்க தொல்புகழார் சிரபுரக் கோன்நலத்தான்
ஞாலம்மிக்க தண்டமிழான் ஞானசம் பந்தன்சொன்ன
கோலம்மிக்க மாலைவல்லார் கூடுவர் வானுலகே.       1.51.11

திருச்சிற்றம்பலம்