சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.66 திருச்சண்பைநகர்

பண் – தக்கேசி

712

பங்மேறு மதிசேர்சடையார் விடையார்பலவேதம்
அங்கமாறும் மறைநான்கவையு மானார்மீனாரும்
வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கேநுனைமூக்கின்
சங்கமேறி முத்தமீனுஞ் சண்பைநகராரே.          1.66.1

713

சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர்சுடர்க்கமலப்
போதகஞ்சேர் புண்ணியனார் பூதகணநாதர்
மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில்விண்ணார்ந்த
சாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பைநகராரே.          1.66.2

714

மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய்தவனுடைய
நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார்
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம்பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பைநகராரே.          1.66.3

715

மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ்சதுவுண்ட
தெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர்திகழ்சுத்திக்
கையர்கட்டங் கத்தர்கரியின் உரியர்காதலாற்
சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பைநகராரே.          1.66.4

716

கலமார்கடலுள் விடமுண்டமரர்க் கமுதம்அருள்செய்த
குலமார்கயிலைக் குன்றதுடைய கொல்லையெருதேறி
நலமார்வெள்ளை நாளிகேரம் விரியார்நறும்பாளை
சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பைநகராரே.          1.66.5

717

மாகரஞ்சேர் அத்தியின்தோல் போர்த்துமெய்ம்மாலான்
சூகரஞ்சேர் எயிறுபூண்ட சோதியன்மேதக்க
ஆகரஞ்சேர் இப்பிமுத்தை அந்தண்வயலுக்கே
சாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பைநகராரே.          1.66.6

         (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.          1.66.7

718

இருளைப்புரையும் நிறத்திலரக்கன்ன்றனையீடழிவித்து
அருளைச்செய்யும் அம்மானேரா ரந்தண்கந்தத்தின்
மருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார்திரைக்கையால்
தரளத்தோடு பவளமீனுஞ் சண்பைநகராரே.          1.66.8

719

மண்டான்முழுதும் உண்டமாலும் மலர்மிசைமேலயனும்
எண்டானறியா வண்ணம்நின்ற இறைவன்மறையோதி
தண்டார்குவளைக் கள்ளருந்தித் தாமரைத்தாதின்மேற்
பண்டான்கொண்டு வண்டுபாடுஞ் சண்பைநகராரே.          1.66.9

720

போதியாரும் பிண்டியாரும் புகழலசொன்னாலும்
நீதியாகக் கொண்டங்கருளும் நிமலனிருநான்கின்
மாதிசித்தர் மாமறையின் மன்னியதொன்னூலர்
சாதிகீத வர்த்தமானர் சண்பைநகராரே.          1.66.10

721 வந்தியோடு பூசையல்லாப் போழ்தில்மறைபேசிச்
சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பைநகர்மேய
அந்திவண்ணன் தன்னையழகார் ஞானசம்பந்தன்சொல்
சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதிசேர்வாரே.   1.66.11

திருச்சிற்றம்பலம்