சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.89 திருஎருக்கத்தம்புலியூர்

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – நீலகண்டேசுரர், தேவியார் – நீலமலர்க்கண்ணம்மை.

பண் – குறிஞ்சி

959

படையார் தருபூதப் பகடார் உரிபோர்வை
உடையான் உமையோடும் உடனா யிடுகங்கைச்
சடையான் எருக்கத்தம் புலியூர்த் தகுகோயில்
விடையான் அடியேத்த மேவா வினைதானே.-1.89.1

960

இலையார் தருசூலப் படையெம் பெருமானாய்
நிலையார் மதில்மூன்றும் நீறாய் விழவெய்த
சிலையான் எருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயிற்
கலையான் அடியேத்தக் கருதா வினைதானே.-1.89.2

961

விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ணாண் அலியாகும் பித்தா பிறைசூடி
எண்ணார் எருக்கத்தம் புலியூ ருறைகின்ற
அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே.-1.89.3

962

அரையார் தருநாகம் அணிவான் அலர்மாலை
விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி
வரையான் எருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற
திரையார் சடையானைச் சேரத் திருவாமே.-1.89.4

963

வீறார் முலையாளைப் பாகம் மிகவைத்துச்
சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான்
ஏறான் எருக்கத்தம் புலியூ ரிறையானை
வேறா நினைவாரை விரும்பா வினைதானே.-1.89.5

964

நகுவெண் டலையேந்தி நானா விதம்பாடிப்
புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத்
தகுவான் எருக்கத்தம் புலியூர்த் தகைந்தங்கே
தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே.-1.89.6

-(*) இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.-1.89.7

965

ஆவா வெனஅரக்கன் அலற அடர்த்திட்டுத்
தேவா எனஅருளார் செல்வங் கொடுத்திட்ட
கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயிற்
தேவே யெனஅல்லல் தீர்தல் திடமாமே.-1.89.8

966

மறையான் நெடுமால்காண் பரியான் மழுவேந்தி
நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே
இறையான் எருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட
கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே.-1.89.9

967-

புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்
சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும்
நித்தன் எருக்கத்தம் புலியூர் நிகழ்வாய
அத்தன் அறவன்றன் அடியே அடைவோமே.-1.89.10

968

ஏரார் எருக்கத்தம் புலியூர் உறைவானைச்
சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன்
ஆரா அருந்தமிழ் மாலை யிவைவல்லார்
பாரா ரவரேத்தப் பதிவான் உறைவாரே.-1.89.11

திருச்சிற்றம்பலம்