சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.56 திருப்பாற்றுறை

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – திருமூலநாதர், தேவியார் – மோகாம்பிகையம்மை.

பண் – பழந்தக்கராகம்

601

காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
ஆரா ராதி முதல்வரே.          1.56.1

602

நல்லா ரும்மவர் தீய ரெனப்படுஞ்
சொல்லார் நன்மலர் சூடினார்
பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை
எல்லா ருந்தொழும் ஈசரே.          1.56.2

603

விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்
எண்ணார் வந்தென் எழில் கொண்டார்
பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை
யுண்ணா ணாளும் உறைவரே.                                        1.56.3

604

பூவுந் திங்கள் புனைந்த முடியினர்
ஏவின் அல்லா ரெயிலெய்தார்
பாவந் தீர்புனல் மல்கிய பாற்றுறை
ஓவென் சிந்தை யொருவரே.          1.56.4

605

மாகந் தோய்மதி சூடிமகிழ்ந் தென
தாகம் பொன்னிற மாக்கினார்
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே.          1.56.5

606

போது பொன்றிகழ் கொன்றை புனைமுடி
நாதர் வந்தென் நலங்கொண்டார்
பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை
வேத மோதும் விகிர்தரே.          1.56.6

607

வாடல் வெண்டலை சூடினர் மால்விடை
கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை
ஆடல் நாகம் அசைத்தாரே.          1.56.7

608

வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்
எவ்வஞ் செய்தென் எழில்கொண்டார்
பவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே.          1.56.8

608

ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி
ஆன வண்ணத்தெம் அண்ணலார்
பான லம்மலர் விம்மிய பாற்றுறை
வான வெண்பிறை மைந்தரே.          1.56.9

610

வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்
வந்தென் நன்னலம் வௌவினார்
பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர் தாமோர் மணாளரே.          1.56.10

611

பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரானைப்
பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ்
பத்தும் பாடிப் பரவுமே.          1.56.11

திருச்சிற்றம்பலம்